மழை காலங்களில்
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் என்ன நடவடிக்கைகள் எடுக்க
வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.இது குறித்து தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மழை காலங்களில்
மாணவர்கள் பாதுகாப்புடன் பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்து கொள்ளும்
பொருட்டு, அனைத்து அரசு, ஊராட்சி, நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்
பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்க பள்ளி
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அந்தந்த பகுதிஉதவி தொடக்க கல்வி
அதிகாரி மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் பின்வரும்
அறிவுரைகளை வழங்க வேண்டும்.
* மழை காலங்களில்
பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்கி மாணவர்களுக்கு இடையூறாக இருந்தால்,
அம்மழை நீரை மின் மோட்டார்கள் மூலம் அகற்றுவதற்கான துரித நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
* நீர் பிடிப்பு
பகுதிகளான ஆறு, ஏரி, குளம், குட்டை, வாய்க்கால் முதலிய பகுதிகளில் நீர்
நிரம்ப வாய்ப்பு இருப்பதால், இத்தகைய நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு அருகில்
மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிப்பதுடன், நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு
அருகில் செல்வதனால் ஏற்படும் அபாயத்தை விளக்க வேண்டும்.
* பள்ளி நேரம்
முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும்
இருக்கும் வகையில் மனித உயிரின் மதிப்பு குறித்து மாணவர்களுக்கு அறிவுரை
வழங்குவதுடன், அந்தந்த பகுதியை சேர்ந்த, பொறுப்பும் தலைமை பண்பும் உள்ள ஒரு
மாணவரை பொறுப்பேற்று வழிநடத்தி செல்லஏற்பாடு செய்ய வேண்டும்.
மின் கசிவு, விழிப்புணர்வு
* பள்ளி வளாகங்களில்
மின் கசிவு ஏற்படாத வகையில், மின்சாதனங்களையும், மின் கம்பிகளையும்
மிகுந்த எச்சரிக்கையுடன் பராமரிப்பதுடன், மின்சாரம் சார்ந்த விழிப்புணர்வை
மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
* மேல் நீர் தொட்டி, கழிவறை கழிவு நீர் தொட்டி ஆகியவற்றிற்கு அருகில் குழந்தைகளை அனுமதித்தல் கூடாது.
* மழை காலங்களில்
நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதால், மாணவர்களுக்கு அது குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், காய்ச்சி வடிகட்டிய குடிநீரை பயன்படுத்த
அறிவுரை வழங்க வேண்டும்.
மரங்களுக்கு கீழ் ஒதுங்குவதால்...
* மாணவர்கள் மழையில்
நனையாமலும், இடி, மின்னல் போன்ற தாக்குதலுக்கு உட்படாமலும் பாதுகாப்பாக
இருப்பதற்கு அறிவுரை வழங்குதல் வேண்டும். மழைக்காலங்களில் மரங்களுக்கு கீழ்
ஒதுங்குவதால் ஏற்படும் அபாயத்தை மாணவர்களுக்கு விளக்கி கூற வேண்டும்.
* தற்போது பெய்து
வரும் கனமழை மேலும் நீடிக்க வாய்ப்பு உள்ளதால் சனிக்கிழமை(நேற்று) மற்றும்
ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களும், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் மற்றும்
உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் தத்தம் தலைமை இடத்தில் தங்கி இருந்து
சூழ்நிலைக்கு ஏற்றவாறு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







