சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நாளை வேலை நிறுத்தம் மேற்கொள்ளவிருப்பதாக தனியார் பள்ளிகளும், தனியார் கல்லூரிகளும் அறிவித்திருந்தன.
இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பள்ளி, கல்லூரிகளின் அங்கீகாரத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன.
இந்நிலையில், பள்ளிகள் நாளை வழக்கம்போல் இயங்கும் என்று தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு திடீரென அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தரமான கல்விக்காக பாடுபட்டு வரும் மக்களின் முதல்வர் அம்மாவை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி சுயநிதி பள்ளி நிர்வாகிகள் நாளை (7/10/2014) உண்ணாவிரதத்திற்கு திட்டமிட்டு இருப்பதால் சுயநிதி பள்ளிகள் புதன்கிழமை (8ஆம் தேதி) திறக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டு இருந்தது.
எனினும், 1.10.2014 செவ்வாய்கிழமை ஏற்கனவே தேர்வுகள் திட்டமிடப்பட்டு இருப்பதால் மாணவர்களின் நலனே அனைத்திலும் முக்கியமானது என்ற மக்களின் முதல்வர் அம்மாவின் எண்ணங்களை கருத்தில் கொண்டும், முந்தைய முடிவை மாற்றி நாளை (7ஆம் தேதி) அனைத்து சுயநிதி பள்ளிகளையும் திறப்பது என்றும் அனைத்து சுயநிதி பள்ளிகளின் சார்பிலும், அனைத்து சங்கங்களின் சார்பிலும் தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மக்களின் முதல்வர் அம்மாவின் விடுதலையை வலியுறுத்தி அனைத்து சுயநிதி பள்ளி நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்ளும் உண்ணாவிரதம் திட்டமிட்டப்படி நாளை சென்னையில் நடைபெறும். மேற்படி கூட்டத்தில் பள்ளி தாளாளர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.








