ஆசிரியர் பணிக்கு
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியமாகி விட்டது. இடைநிலை
ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி
பெற்றால் மட்டுமே அரசு பள்ளிகளில் மட்டுமின்றி அரசு உதவிபெறும் பள்ளிகளில்
பணியாற்ற முடியும்.மேலும் தனியார்
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற
வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித்
தேர்வு எழுதியவர்களில் 52 ஆயிரம் பேர் வெற்றிபெற்றனர். இவர்களில் 15 ஆயிரம்
பேருக்கு மட்டும் சமீபத்தில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டுள்ளது. தேர்ச்சி
பெற்றவர்களுக்கு தகுதி சான்றிதழ் ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளத்தில்
பதிவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடப்பட்டது.
தேர்ச்சி பெற்ற
ஆசிரியர்கள், அவர்களுடைய ரோல் எண், பிறந்த தேதியை பதிவு செய்துசான்றிதழை
பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஒருவர் 3 முறை மட்டும் பதிவிறக்கம் செய்யும்
வாய்ப்பும் அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஆசிரியர்கள் தங்களது தகுதி
சான்றிதழை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்தனர்.ஒருசிலர் மட்டும் இதுவரை
பதிவிறக்கம் செய்ய முடியாமல் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். கிராம
பகுதியை சேர்ந்தவர்கள் கணினி மையத்திற்கு சென்று அங்குள்ளவர்களின்
உதவியுடன் பதிவிறக்கம் செய்ய முயற்சி செய்து அது பலன் அளிக்காமல்
போய்விட்டது. தொடர்ந்து 3 முறை முயற்சி தோல்வி அடைந்ததால் ஆசிரியர் தேர்வு
வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
இதுவரையில் தகுதி சான்றிதழ் பெற முடியாமல் தேர்வு வாரியத்திற்கு கடிதம்
எழுதியுள்ளனர்.அவர்களின் புகாரை பதிவு செய்து விரைவில் தகுதி சான்றிதழ்
வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து தேர்வு
வாரிய அதிகாரி கூறுகையில், ‘‘தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய 3 வாய்ப்பு
கொடுத்தும் அதனை முறையாக பயன் படுத்தவில்லை. இதுவரை 400பேர் சான்றிதழ்
கேட்டு பதிவு செய்துள்ளனர். சான்றிதழ் கிடைக்காதவர்கள் கடிதம் மூலம் தகவல்
தெரிவிக்க வேண்டும். அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம்
விரைவில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்படும். ஓரிரு நாட்களில் இதுபற்றிய
அறிவிப்பு வெளிவரும் என்றார்.







