தகவல் தொழில் நுட்ப
நிறுவனங்களில், 25 ஆயிரம் பேர், போலி சான்றிதழில், பணியில்
சேர்ந்திருப்பதாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார், 'பகீர்' தகவலை
வெளியிட்டுள்ளனர்.பிரபல
நிறுவனங்கள் : பெங்களூரில், பிரபல நிறுவனங்களில் பயிற்சி பெற்றதாக, போலி
சான்றிதழ்களை, ஏழு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் அளித்ததன் மூலம்,
பெங்களூரு, சென்னை, ஐதராபாத் போன்ற நகரங்களிலுள்ள, தனியார் தகவல் தொழில்
நுட்ப அலுவலகங்களில், 25 ஆயிரம் பேர் பணியாற்றுவதாக வந்த தகவலையடுத்து,
கடந்த, செப்., 26ம் தேதி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
மேற்கொண்டனர்.
இதில், பெங்களூரில்,
162; சென்னை, ஐதராபாத்தில், தலா, மூன்று; புனேயில், ஒரு நிறுவனம் என,
மொத்தம், 169 நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்காக, புகழ்பெற்ற
நிறுவனங்களின் பெயரில், வேலை, புராஜெக்ட் அனுபவம் என, போலி சான்றிதழை
தயாரித்து கொடுத்திருந்தது தெரிந்தது. இத்தகைய போலி நிறுவனங்கள் பட்டியலை,
பொது மக்கள் பார்வைக்கு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையான
நிறுவனங்களுக்கும் தகவல் அனுப்பி, பணியில் அமர்த்துவதற்கு முன்,
சான்றிதழ்களை தீவிரமாக பரிசோதிக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார்
அறிவித்துள்ளனர்.
புகார் : 'இ -
மெயில்' மூலம் வந்த புகாரின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட தனியார் வேலை
வாய்ப்பு அலுவலகத்துக்கு, விசாரணைக்கு சென்ற ஏட்டு ஒருவர், அந்த தகவலை
உறுதி செய்த பின், அது போன்று, பெங்களூரில், ஏழு அலுவலகங்களில் போலீசார்
திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது,
பிரபல நிறுவனங்களின் பெயரில், போலி சான்றிதழ் தயாரிக்க பயன்படுத்திய
லெட்டர்ஹெட், கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு கருவி, பிரின்டர், லேப்-டாப்,
ஸ்கேனர்கள் கைப்பற்றப்பட்டன. பல வேலை வாய்ப்பு மையங்கள் சோதனையிட்டு, இது
தொடர்பாக, 26 பேரை கைது செய்துள்ளனர். 25 ஆயிரம் பேர், போலி சான்றிதழுடன்
தனியார் ஐ.டி., கம்பெனிகளில் பணியில் சேர்ந்திருப்பதும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு
டி.சி.பி., அபிஷேக் கோயல் கூறுகையில், "போலி சான்றிதழ் தயாரித்த
நிறுவனங்கள் பட்டியலை, உண்மையான நிறுவனங்களின் நன்மைக்காக,
அனுப்பியுள்ளோம். இதை பார்த்து, புதிய ஊழியர்களை பணியில் அமர்த்தும்போது,
சோதனை செய்ய வசதியாக இருக்கும். தேவைப்பட்டால், எங்கள் விசாரணை அதிகாரிகளை
தொடர்பு கொள்ள, http//www.bcp.gov.in/doc/fakecompanies28/10/2014 என்ற
இணையதளத்தில் பார்க்கலாம்,” என்றார்.







