கம்ப்யூட்டரும், ஸ்மார்ட்போனும், வீடியோ கேமும்
குழந்தைகளின் சிந்தனை திறனை முடக்கிப் போடுகின்ற நிலைதான் இன்று பல
வீடுகளிலும் உள்ளது. இவற்றுக்கு குழந்தைகள் அடிமையாகின்ற நிலையும் உள்ளது.
இவற்றில் இருந்து அவர்களை மீளச்செய்து, குழந்தைகளின் கிரியேட்டிவிட்டி
எனப்படும் சிந்தனை திறனை வளர்க்கவும் பல வழிகள் உள்ளன. அது அவர்களை
வெற்றிப்படிகளில் அழைத்து செல்லும்.
* ஓய்வு நேரத்தை புதுமையாக பயன்படுத்துவது
முதல் வழியாகும். சுற்றுலா பயண திட்டத்தை குழந்தைகளை கொண்டு வடிவமைக்க
செய்யலாம், எங்கெல்லாம் செல்லலாம், அதற்கான பயண செலவு போன்றவற்றை
குழந்தைகளையும் அறிந்திருக்க செய்யலாம். வாரத்தில் ஒருநாள் குழந்தைகளை
பூங்காக்களுக்கு அழைத்து சென்று விளையாட அனுமதிக்கலாம்.
* படிப்பு மட்டுமல்ல வாழ்க்கை என்பதை உணர செய்ய
வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கு உள்ளும் ஒளிந்திருக்கும் திறமைகளை
வெளிக்கொண்டுவருவதும் அவசியம். பாட்டு, தையல், நீச்சல், கராத்தே, சைக்கிள்
ஓட்டுதல் என்று அவர்களுக்கு பிடித்தமானவற்றை செய்துகொள்ள ஒருநாளை
ஒதுக்கிவிடலாம்.
* விடுமுறை நாட்களில் சிறிய அளவிலான
புராஜக்ட்களை அவர்களை கொண்டு செய்ய சொல்லாம். விடுமுறை நாட்களில் சந்தித்த
நபர்கள், கண்ட சுற்றுலா தலங்கள் ஆகியவற்றை பற்றி ஒரு கட்டுரை தயார் செய்ய
சொல்லாம். குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை சேகரித்து ஒரு ஆல்பம்
தயாரிக்க கூறலாம்.
* நகரங்களில் வாழ்கின்றவர்கள் குழந்தைகளை
கிராமங்களில் உள்ள உறவினர் வீடுகளுக்கு அழைத்து செல்லலாம். அங்கு பயிர்கள்
பயிரிடப்படும் விதம், காய்கறிகளின் விளைச்சல் போன்றவற்றை
சுட்டிக்காட்டலாம். இதன் மூலம் கிராமிய வாழ்க்கை முறைகளும், அங்குள்ள
சுற்றுச்சூழல் விஷயங்களும் குழந்தைகளின் மனதில் நன்கு பதியும்.
* ஒருநாள் முழுவதும் குழந்தைகளுக்காக
ஒதுக்கிவைக்க வேண்டும். அன்று முழுவதும் குழந்தைகளுடன் விளையாடுதல்,
அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிடுதல், குழந்தைகளை முதியோர் இல்லங்களுக்கு
அழைத்து சென்று அவர்களுக்கு உணவு வழங்குதல் அவர்களின் நிலைகளை விளக்குதல்
அவர்களுக்கு புதிய சிந்தனைகளை உருவாக்கும்.
* பார்த்தல், கேட்டல், தொடுதல், வாசனைகளை
நுகர்தல், உணவின் ருசி அறிதல் போன்றவற்றை மேம்படுத்த அவர்களுக்கு
கற்றுக்கொடுக்க வேண்டும். பழங்கள், பூக்களை அவர்களுக்கு வழங்கி அவற்றின்
சுவையை, மணத்தை, நிறத்தை கூறச் செய்யலாம்.
* குழந்தை பருவத்தில் இருந்தே தலைமைப்பண்பினை
வளர்க்க வேண்டும். சிறு வயதில் இருந்தே தலைமைப்பண்பு வளர்ப்பதின் வாயிலாக
அவர்களுக்கு பொறுப்புணர்வும், சிந்தனை திறனும் அதிகரிக்கும். வீட்டில்
செய்திதாள்களை அடுக்கிவைத்தல், படுக்கை அறையை ஒழுங்கு செய்தல் போன்ற தினசரி
பணிகளை செய்ய சொல்லலாம்.







