சாதனைக்கு, வறுமையோ, சூழ்நிலையோ தடையல்ல; ஆர்வம், முயற்சி, கடின உழைப்புகளே
தேவை என, கனடா நாட்டின் குயின்ஸ் பல்கலையின் கணித ஆய்வாளர் ராமமூர்த்தி
பேசினார்.
சென்னை, பை கணித மன்றத்தின் சார்பில், கணித மேதை ராமானுஜத்தின் 127வது
பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கணித போட்டிகளில் வெற்றிபெற்ற, மாநகராட்சி
பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு பரிசளித்து, ராமானுஜத்தின் வாழ்க்கை
வரலாற்றை விளக்கி, கணித ஆய்வாளர் ராமமூர்த்தி பேசியதாவது: பார்ட்டீசியன்,
சர்க்கிள் மெத்தடு உள்ளிட்ட முக்கியமான மூன்று தீர்வுகளை, இந்த உலகத்துக்கு
தந்தவர் ராமானுஜம். அவர் வாழ்வில், வறுமையில் வாடியவர்;
படிப்பதற்கு உகந்த சூழலை பெறாதவர். ஆனாலும், தன் விடாமுயற்சியாலும், கடின
உழைப்பாலும்தான் சாதனைகளை புரிந்தார். மாணவர்களின் சாதனைகளுக்கும் அது
பொருந்தும். மாணவர்களுக்கு, கணிதத்தின் ஆர்வத்தை ஏற்படுத்த, கணித
ஆசிரியர்களும், கணித மன்றங்களும், செயல்முறை கணிதத்தை பயிற்றுவிக்க
வேண்டும்.
பல்வேறு போட்டிகளை நடத்த வேண்டும். நானும் கனடாவில்,
பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்ட போதுதான், எனக்குள் தன்னம்பிக்கையும்
ஆர்வமும் பிறந்தன. இவ்வாறு, அவர் பேசினார்.
பை கணித மன்றத்தின்
சிவராமன் பேசுகையில், "ஏழை மாணவர்கள் படிக்கும் மாநகராட்சி பள்ளிகளில்,
நாங்கள் பயிற்சிகளையும், போட்டிகளையும் நடத்தியபோது, அவர்களிடம், இயல்பாகவே
நிறைய திறமைகள் இருப்பதை கண்டு வியந்தோம்" என்றார்.