கும்பகோணம் பள்ளி தீ விபத்தில், 94 குழந்தைகள் பலியான வழக்கில், கீழ்கோர்ட்
விதித்த தண்டனையை நிறுத்தி வைக்க, ஐகோர்ட் மறுத்து விட்டது.கும்பகோணம்,
கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில், 2004 ஜூலை 16ம் தேதி, ஏற்பட்ட தீ
விபத்தில், 94 குழந்தைகள் கருகி பலியாயினர்; 18 பேர் காயம் அடைந்தனர்.
இந்த வழக்கில், பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு,
ஆயுள் தண்டனை, தாளாளர் சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, மாவட்ட
துவக்கக் கல்வி அலுவலர் பாலாஜி, துவக்கக் கல்வி அலுவலக கண்காணிப்பாளர்
தாண்டவன் உட்பட, எட்டு பேருக்கு, தலா, ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
விதித்து, தஞ்சாவூர் கோர்ட உத்தரவிட்டது. தண்டனையை நிறுத்தி வைக்க, மதுரை
ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கில், மாவட்ட துவக்கக் கல்வி முன்னாள் அலுவலர் பி.பழனிச்சாமி,
மாவட்டக் கல்வி அலுவலர் நாராயணசாமி உட்பட, 11 பேரை, கீழ்கோர்ட் விடுதலை
செய்தது. இதை எதிர்த்து, அரசு தரப்பில், மதுரை ஐகோர்ட் கிளையில்,
மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை, நீதிபதிகள் ஏ.செல்வம், கே.பி.கே.வாசுகி ஆகியோர் விசாரித்தனர்.
தண்டனை பெற்றவர்கள் சார்பில், ஆஜரான வழக்கறிஞர்கள், வழக்கின் இறுதி
விசாரணை முடியும் வரை, கீழ்கோர்ட் விதித்த தண்டனையை நிறுத்தி வைத்து,
ஜாமின் கோரினர்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை விரைந்து விசாரித்து முடிப்பதற்காக, இறுதி விசாரணையை, வரும் பிப்., 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.







