ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடர், முழுமையான மதிப்பீட்டு முறை,
முப்பருவ முறை கடந்த 2012-13-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்பிறகு, 2013-14-ஆம் ஆண்டில் 9-ஆம் வகுப்புக்கும் இது
விரிவுப்படுத்தப்பட்டது.இந்த முறையின் கீழ் ஆண்டு பொதுத்தேர்வின் அடிப்படையில்
மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்யாமல் ஆண்டு முழுவதும் வகுப்பறையில்
அவர்கள் கற்கும் திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது.
மூன்று பருவங்களில் ஒவ்வொரு பருவத்துக்கும் எழுத்துத் தேர்வுக்கு 60
மதிப்பெண்ணும், மாணவர்களின் செயல்பாடுகளுக்கு 40 மதிப்பெண்ணும்
வழங்கப்படும். ஆண்டு இறுதியில் இந்த மதிப்பெண்ணின் சராசரி மாணவர்களுக்கு
மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
2014-15-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பிலும் தொடர் மதிப்பீட்டு முறை
அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சி.பி.எஸ்.இ.
பாடத்திட்டத்தில் கூட 10-ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு முறை
பின்பற்றப்படுவதால், 10-ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு முறையே தொடர வேண்டும்
என ஆசிரியர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து,
10-ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு முறையைத் தொடர பள்ளிக் கல்வித் துறை முடிவு
செய்தது.
இந்த நிலையில், 10-ஆம் வகுப்பில் வரும் கல்வியாண்டில் தொடர், முழுமையான
மதிப்பீட்டு முறையை அமல்படுத்தலாமா என்பது குறித்து ஆய்வு நடத்த பள்ளிக்
கல்வித் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மாநில அரசின் திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறையின் கீழ் உள்ள
மதிப்பீடு, செயல்முறை ஆராய்ச்சித் துறை இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளது.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறும்போது முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட
சமச்சீர் கல்வி முறையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது கூட
சமச்சீர் கல்வி முறை படிப்படியாக சிறப்பாக அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே
அது சரியான முறை தான் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் தற்போது அரசால்
கொண்டுவரப்பட்ட சி.சி.இ முறை 9 ஆம் வகுப்பு வரை கொண்டுவரப்பட்டு 10 ஆம்
வகுப்பிற்கு கொண்டுவரப்படாததால், இந்த தரமான மதிப்பீட்டு முறை குறித்த
விழிப்புணர்வு பொது மக்கள் மத்தியில் ஏற்படவில்லை. மேலும் 9 ஆம் வகுப்பு
வரை சி.சி.இ மதிப்பீட்டு முறையில் பயின்ற மாணவர்கள் ஹார்மோன் மாற்றங்களால்
குழம்பிய மனநிலையில் இருக்கக்கூடிய வாழ்வின் முக்கியப்பருவத்தில், தற்போது
உள்ள பொதுத்தேர்வு முறையில் படிக்க மிகவும் சிரமப்படுவார்கள். எனவே அரசு
உடனடியாக சி.சி.இ மதிப்பீட்டு முறையை 10ஆம் வகுப்பிற்கு அமல்படுத்தினால்
மட்டுமே தற்போதைய அரசால் கொண்டுவரப்பட்ட இம்முறை முழுமையடையும் - இவ்வாறு
கூறுகிறார்கள்.