பொறியியல் பட்டதாரி மாணவிகளுக்கென தனி வேலைவாய்ப்பு முகாமை அண்ணா
பல்கலைக்கழகம் நடத்துகிறது. உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றி,
இணைப்புக் கல்லூரி மாணவர்களும் பயன்பெறும் வகையில் மாநில அளவிலான
வேலைவாய்ப்பு முகாமை ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இப்போது 2015-ஆம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு முகாமை சென்னை, கோவை, திருநெல்வேலி என மண்டலம் வாரியாக நடத்தி வருகிறது.இப்போது சென்னை மண்டலத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் சென்னை ராஜீவ்காந்தி சாலையில் அமைந்துள்ள அக்னி தொழில்நுட்ப கல்லூரி
மையத்தில் திங்கள் (ஜன.5), செவ்வாய்க்கிழமைகளில் பொறியியல் மாணவிகளுக்கான
வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகிகள் கூறியது:
அக்னி தொழில்நுட்ப கல்லூரி மையத்தில் ஜனவரி 5,6 தேதிகளில் நடைபெறும்
வேலைவாய்ப்பு முகாமில் 1,500 மாணவிகள் வரை பங்கேற்பார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களின் வசதிக்காக தாம்பரம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், சென்னை
சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய மூன்று பகுதிகளிலிருந்து வேலைவாய்ப்பு
முகாம் நடைபெறும் மையத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன
என்றனர்.







