தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைக் கண்காணிக்க ஏதுவாக மாவட்டக்
கல்வி அலுவலர் பணியிடங்களைக் கூடுதலாக உருவாக்க வேண்டும் என
தலைமையாசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மாநாடு அண்மையில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்ட முக்கிய கோரிக்கைகள் விவரம்: மாணவ,
மாணவிகளுக்கு 14 வகையான நலத்திட்ட உதவிகளை, கற்பித்தல் பணிகள் பாதிக்காமல்
வழங்க ஏதுவாக ஒவ்வொரு பள்ளிக்கும் நலத்திட்ட உதவிகள் பெற்று வழங்க ஒரு
பணியாளரை நியமிக்க வேண்டும்.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை
வழங்க வேண்டும். உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மட்டும்
வழங்கப்படாமல் உள்ள எம்.பில். உயர் படிப்புக்கான ஊக்க ஊதிய உயர்வுக்கான
அரசாணையை வெளியிட வேண்டும்.
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த அனைத்துப் பணிகளும்,
புள்ளி விவரங்களும் கணினிமயமாக்கப்பட்டு இணைய வழி மூலம் பணிகள்
மேற்கொள்ளப்படுவதால் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் இணையதள
வசதிகளுடன் தேவையான கணினிகளை வழங்க வேண்டும். இந்தப் பணிகளை மேற்கொள்ள
முழுநேர கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த
மாநாட்டில் வலியுறுத்தப்பட்டன.
இந்த மாநாட்டையொட்டி, தலைமையாசிரியர் சங்கத்தின் மாநில அலுவலகக் கட்டடமும் சென்னை ஊரப்பாக்கத்தில் திறக்கப்பட்டது.







