பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்திற்கு
அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததால், வரும் கல்வி ஆண்டில் எந்த
பாடத்திட்டம் பின்பற்றப்படும் என்ற குழப்பம், மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை,
பள்ளி மாணவர் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படும். புதிய தொழில்நுட்பம்,
வேலைவாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, புதிய பாடத்திட்டத்தை,
கல்வித்துறை தயாரித்து வெளியிடுகிறது.
இதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2க்கான புதிய
பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, இந்தாண்டு பிளஸ் 1க்கு புதிய பாடப்
புத்தகங்கள் வெளியாக வேண்டும். அடுத்த கல்வியாண்டில், பிளஸ் 2க்கு புதிய
பாடத் திட்டம் அமலாக வேண்டும். இதற்காக, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம், பாட வாரியாக வல்லுனர் குழுவை அமைத்தது.
அக்குழு, 25 பாடத் தலைப்புகளில் வரைவு பாடத்
திட்டத்தை தயாரித்தது. கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என, பல தரப்பினரிடமும்
கருத்துக்களை கேட்டு, தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, வரைவு பாடத்திட்டம்
இறுதி செய்யப்பட்டது. தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே,
பாடப்புத்தகம் அச்சடிக்கப்பட்டு, வரும் கல்விஆண்டில் வழங்க முடியும்.
இதற்கான ஒப்புதல் கேட்டு, லோக்சபா தேர்தலுக்கு
முன், அரசுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால்,
இதுவரை புதிய பாடத்திட்டத்திற்கான ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால், புதிய
பாடத்திட்டம் வருமா, பழைய பாடத்திட்டமே தொடருமா என்ற குழப்பம், மாணவர்கள்,
பெற்றோர், ஆசிரியர் களிடையே ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: பிளஸ் 1,
பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் குறித்து அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இதுவரை
அறிவிப்பு ஏதும் இல்லாததால், பழைய பாடத்திட்டமே தொடரும் என தெரிகிறது.
இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.