பள்ளிகளில் நாள்தோறும் விளையாட்டு வகுப்பு நடத்த வேண்டும் என மத்திய தகவல்
ஒலிபரப்பு இணையமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தெரிவித்தார்.இது குறித்து
சனிக்கிழமை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு நடத்திய"நாட்டின்
வளர்ச்சியில் விளையாட்டின் பங்கு' குறித்த கருத்தரங்கில் அவர் கூறியது:
பள்ளிகளில் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக வாரம் ஒரு நாள் விளையாட்டு வகுப்பு
என்பதற்கு பதிலாக நாள்தோறும் விளையாட்டு வகுப்பை நடத்த வேண்டும்.
விளையாட்டுகளம் மட்டும்தான் அந்தந்த விளையாட்டு சார்ந்த அனைத்து மக்களின்
சமூக, கலாசாரத்தை இணைக்கிறது. ஆசிரியர்கள் விளையாட்டு பற்றிய தங்களது அறிவை
மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.மேலும், மாணவர்களின் விளையாட்டு திறமைகளைக்
கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டு ஒன்றுதான் நாட்டின் பெருமையை
உலகுக்கு பறைசாற்றுவதால் விளையாட்டு தொடர்பான அறிவை ஊக்குவிக்க நாம்
அனைவரும் பாடுபடவேண்டும் என்றார்.