வருவாய்த் துறையில் அனைத்து
அலுவலர்களுக்கும் மடிக் கணினி வழங்கப்பட்டுள்ளதால், ஜாதிச் சான்றிதழ் உள்பட
பல்வேறு வகையான சான்றிதழ்களும் இரண்டு நாள்களில் வழங்கப்பட்டு வருகின்றன.அரசுத் துறை அதிகாரிகளுக்கும், பொது மக்களுக்கும் பாலமாகச் செயல்படும் பொதுச் சேவை மைய அலுவலர்கள் இந்தத் தகவலை தெரிவித்தனர்.
ஜாதிச் சான்றிதழ், ஆண்டு வருமான சான்றிதழ் உள்பட
பல்வேறு வகையான சான்றிதழ்களை வருவாய்த் துறை வழங்கி வருகிறது. குழந்தைகளை
பள்ளியில் சேர்ப்பது, கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றுக்கு
வருவாய்த் துறையின் சான்றிதழ்கள் முக்கியமாகும்.
இந்தச் சான்றிதழ்களை பெறுவதற்கு விண்ணப்பப் படிவங்களை
பூர்த்தி செய்து வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர் என ஒவ்வொருவரிடம்
சென்று கையெழுத்துகளைப் பெற்று சான்றிதழை வாங்க வேண்டிய நிலை இருந்தது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்ட பொதுச்
சேவை மையங்கள் மூலம் இந்தப் பிரச்னை இப்போது தீர்க்கப்பட்டுள்ளது. இந்தச்
சேவை மையங்களால் அனைத்து வகையான சான்றிதழ்களும் அதிகாரிகளின் கையெழுத்துடன்
இரண்டு நாள்களில் வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, பொதுச் சேவை மைய அலுவலர்களும்-வருவாய்த் துறை அதிகாரிகளும் கூறியது:
ஜாதிச் சான்றிதழ் உள்பட எந்த வகையான சான்றிதழ்களைப்
பெறவும், வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள பொதுச் சேவை மையத்தை நாட
வேண்டும். அங்கு எந்த சான்றிதழைப் பெற வேண்டுமோ அதற்கான விண்ணப்பம்,
கம்ப்யூட்டரிலேயே பதிவு செய்யப்படும்.
சான்றிதழுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும்
சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்படும். இதன்பின்,
விண்ணப்பம் பெறப்பட்டதற்கான அத்தாட்சி சான்று, விண்ணப்பதாரர்களுக்கு
அளிக்கப்படும். அவர்களின் செல்லிடப்பேசி எண்ணும் கேட்டுப் பெறப்படும்.
இதன்பின், சான்றிதழுக்கான விண்ணப்பம் உரிய ஆவணங்களுடன்
வருவாய் ஆய்வாளருக்கு இணையதளம் வாயிலாகவே அனுப்பி வைக்கப்படும். உரிய
ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு, அதற்கு ஒப்புதல் அளித்து அதனை துணை
வட்டாட்சியருக்கு இணையதளம் வாயிலாகவே அவர் அனுப்புவார்.
அனைத்தையும் சரிபார்த்த பிறகு, துணை வட்டாட்சியர் இறுதி
ஒப்புதலை அளித்து சான்றிதழானது, பொதுச் சேவை மையத்துக்கு வரும். வருவாய்
ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என அனைவருக்கும் மடிக்
கணினியும், இணையதள இணைப்புக்கான வசதியும் அளிக்கப்பட்டுள்ளதால் அவர்கள்
எங்கிருந்தாலும் சான்றிதழுக்கான ஒப்புதலை அளிக்க முடியும்.
ரூ.50 கட்டணம்: பொதுச் சேவை மையத்தின் மென்பொருளுக்கு
வரும் இறுதிசெய்யப்பட்ட சான்றிதழ், உரிய விண்ணப்பதாரருக்கு பதிவிறக்கம்
செய்யப்பட்டு அளிக்கப்படும். முன்னதாக, சான்றிதழ் தயாரான தகவல் குறித்து
விண்ணப்பதாரர்களின் செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த
சான்றிதழுக்காக ஒவ்வொரு விண்ணப்பதாரர்களிடம் இருந்தும் ரூ.50 கட்டணம்
வசூலிக்கப்படுகிறது. இந்தப் புதிய வசதி மூலமாக பொதுமக்களுக்கு அலைச்சலும்,
பணவிரயமும் மீதமாகிறது எனத் தெரிவித்தனர்.







