பிளஸ் 2 இயற்பியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறையும் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான முக்கியப்
பாடமான பிளஸ் 2 இயற்பியல் பாடத் தேர்வும், பொருளாதாரப் பாடத் தேர்வும்
வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
இயற்பியல் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்த நிலையில், ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு 3,5,10 மதிப்பெண் வினாக்கள் அதிகம்
எதிர்பார்க்கப்பட்ட பகுதிகளில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன. ஏற்கெனவே
கேட்கப்பட்ட வினாக்களே இந்தப் பகுதிகளில் வந்திருப்பதால் மாணவர்கள்
நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். இயற்பியல் தேர்வில் மாணவர்கள் யாரும்
தேர்ச்சி பெறாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அதேநேரத்தில், ஒரு மதிப்பெண் வினாக்களில் 6 வினாக்கள்
கடினமானவையாக இருந்தன. மிகச் சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்குக் கூட 2
அல்லது 3 வினாக்களுக்கு விடையளிப்பதில் சிரமம் இருந்திருக்கும். எனவே, இந்த
ஆண்டு முழு மதிப்பெண் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் எனவும்
அவர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 இயற்பியல் பாடத்தில் கடந்த ஆண்டு 2,710 மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்திருந்தனர்.
இந்தத் தேர்வுடன் பி.இ. படிப்பில் சேருவதற்கான கணிதம்,
இயற்பியல், வேதியியல் பாடத் தேர்வுகள் நிறைவடைந்தன. எம்.பி.பி.எஸ்.
படிப்பில் சேருவதற்கான மற்றொரு முக்கியப் பாடமான உயிரியல் பாடத் தேர்வு
மார்ச் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது.
பொருளாதாரம்: பொருளாதாரப் பாடத்துக்கான வினாத்தாள்
சற்றுக் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இதில், 20 மதிப்பெண்
வினா பகுதியில் 78-ஆவது கேள்வியில் தேவை நெகிழ்ச்சியின் வகைகள்,
முக்கியத்துவத்தை விவரி என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இந்தக் கேள்வி
பாடப் புத்தகத்துக்கு வெளியிலிருந்து கேட்கப்பட்டிருந்ததாக ஆசிரியர்
தெரிவித்தனர். இதேபோல ஒரு மதிப்பெண் வினாப் பகுதியில் 14-ஆவது கேள்வியில்
கொடுக்கப்பட்டிருந்த நான்கு விடைகளும் தவறானது என ஆசிரியர்கள்
தெரிவித்தனர்.
37 பேர் சிக்கினர்: பிளஸ் 2 இயற்பியல் தேர்வில்
காப்பியடித்ததாக மாநிலம் முழுவதும் 35 பேர் சிக்கினர். பொருளாதாரப் பாடத்
தேர்வில் காப்பியடித்ததாக 26 பேர் சிக்கினர்.