சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டத்தில் இணைவதற்கான கருணை காலம் (‘கெடு’) நாளையுடன்(செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.
நேரடி மானியம்
தமிழ்நாட்டில் மொத்தம் 1 கோடியே 50 லட்சத்து 41 ஆயிரத்து 65 பேர்
சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர். இதில் 89 லட்சத்து 67
ஆயிரத்து 403 பேர் இந்தியன் ஆயில் கழகத்திலும்(இண்டேன்), 38 லட்சத்து 43
ஆயிரத்து 134 பேர் பாரத் பெட்ரோலிய நிறுவனத்திலும், 22 லட்சத்து 30
ஆயிரத்து 528 பேர் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்திலும் இணைப்பை
பெற்றுள்ளனர்.
மத்திய அரசு சமையல் கியாஸ் சிலிண்டர் நேரடி மானிய
திட்டத்தை தமிழகத்தில் கடந்த ஜனவரி 1–ந்தேதி அமல்படுத்தியது. சமையல் கியாஸ்
நேரடி மானிய திட்டத்தில் இணையாத வாடிகையாளர்களுக்கு ஜனவரி 1–ந்தேதியில்
இருந்து மார்ச் 31–ந்தேதி வரை கருணை காலமாக எண்ணெய் நிறுவனங்கள்
அறிவித்திருந்தன.
நாளை கடைசி நாள்
அதன்படி, நாளையுடன்(செவ்வாய்க்கிழமை) இந்த கருணை காலம் முடிவடைகிறது.
கருணை
காலத்துக்குள் மானிய திட்டத்தில் இணையாதவர்களுக்கு ஏப்ரல் 1–ந்தேதி முதல்
ஜூன் 30–ந்தேதி வரை சந்தை விலையில் தான் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும்
என்றும், அவர்கள் மானிய திட்டத்தில் இணைந்த பிறகு மானிய தொகை தகுதியின்
அடிப்படையில் அனுமதிக்கப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சிலிண்டர் எண்ணிக்கை
கருணை காலத்தில் சமையல் கியாஸ் நேரடி மானியத்தில் இணைந்தவர்களுக்கு
விநியோகிக்கப்பட்ட சிலிண்டர் எண்ணிக்கை அடிப்படையில் வங்கி கணக்கில் மானிய
தொகை மொத்தமாக சேர்க்கப்பட்டு விடும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள்
அறிவித்துள்ளன.