போலி வாக்காளர்கள் களை எடுக்கும் வகையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் பதிவு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.வாக்காளர்
பட்டியலில், பெயர் திருத்தம், பிழைகள் போன்றவை திருத்தம் செய்யும் பணிகள்,
புதியதாக வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் ஆண்டுதோறும்
மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள், போலி
வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், போலி வாக்காளர்கள் பட்டியலிலிருந்து களை எடுக்கவும்; முறையான
வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன்,
ஆதார் அடையாள அட்டை எண்ணும் பதிவு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட
உள்ளது.
இதற்காக அரசியல் கட்சியினருடன் ஆலோசனை கூட்டம்
பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. சப்-கலெக்டர் ரஷ்மி
சித்தார்த் ஜெகடே தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் சுமகுமாரி, கமிஷனர்
சுந்தராம்பாள், தாசில்தார் சண்முகராஜ் முன்னிலை வகித்தனர். இதில், அரசியல்
கட்சியினர் பங்கேற்றனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள்
கூறியதாவது: வாக்காளர் பட்டியல் பிழையில்லாமலும், போலி வாக்காளர்களை களை
எடுக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பொள்ளாச்சி கோட்ட அளவிலான
வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் பிழை நீக்கம் மற்றும் வாக்காளர்
அடையாள அட்டையுடன் ஆதார் எண் பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட
உள்ளன. வரும் ஏப்., மாதம் 12ம் தேதி முதல் முகாம்கள் ஓட்டுச்சாவடி
மையங்களில் நடத்தப்படும்; மே மாதம் 31க்குள் முடிக்கப்படும்.
இதற்காக
அரசியல் கட்சியினர், அதிகாரிகள் அடங்கிய குழு மூலம் வீடு வீடாக சென்று
இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வாக்காளர் அட்டை எண்ணுடன், ஆதார் எண்
லிங்க் பண்ணுவதால், போலிகள் தடுக்கவும்; குளறுபடிகள் களையவும் முடியும்.
ஆதார் எண் இல்லாதவர்களுக்கு, புகைப்படம் எடுத்து ஆதார் எண் வழங்கப்படும்.
பின் அவர்களது எண்ணும் பதியப்படும். ஏப்., மாதம் துவங்கும் முகாம்
தொடர்ந்து நான்கு வாரங்களுக்கு நடத்தப்படும். பொதுமக்கள் மற்றும் அரசியல்
கட்சியினர் இப்பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசியல் கட்சியினருக்கு
இத்திட்டம் குறித்து விளக்கும் வகையில், இந்த ஆலோசனை கூட்டம்
நடத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.







