நாளந்தா பல்கலைக்கழகத்தை பெற்ற பெருமைமிக்க மாநிலம் பீகார். ஒரு
காலத்தில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வந்து இந்த
பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கல்வி கற்றார்கள்.
அப்படி கல்வியில்
சிறந்து விளங்கிய பீகார் மாநிலத்தில் கல்வியின் தரம் எப்படி இருக்கிறது
என்பதற்கு, அங்கு தற்போது நடந்து வரும் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு சிறந்த
உதாரணம் ஆகும்.
பீகாரில் 10–ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 17–ந்
தேதி தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 1,217 தேர்வு மையங்களில் 14
லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள்.
பரீட்சையில் ‘காப்பி‘
பொதுவாக, தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பது என்பது அங்கொன்றும், இங்கொன்றுமாக அபூர்வமாக நடைபெறும்.
ஆனால்
பீகார் மாநிலத்தில் தேர்வில் காப்பி அடிப்பது என்று, ‘காப்பி குடிப்பது‘
போன்ற சர்வ சாதாரணமான நிகழ்வு என்பது தற்போது நடைபெற்று வரும் தேர்வின்
மூலம் அம்பலமாகி இருக்கிறது.
வைஷாலி மாவட்டத்தில் உள்ள பல மாடிகளை
கொண்ட ஒரு தேர்வு மையத்தில் நேற்று முன்தினம் பரீட்சை நடைபெற்றுக்
கொண்டிருந்த போது, அதை சுற்றிலும் ஏராளமான பேர் நின்று கொண்டிருந்தனர்.
மேலும் பல பேர் அந்த கட்டிடத்தின் மேல் ஏறி ஜன்னல் பகுதியில் நின்று
கொண்டிருந்தனர்.
ஜன்னல் வழியாக ‘பிட்‘ தானம்
கட்டிடத்தில் ஏதோ பூச்சு வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள் பார்த்தால், அதுதான் இல்லை.
அவர்களெல்லாம் உள்ளே அறையில் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் மாணவ–மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்கள்.
உள்ளே
பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு, ‘காப்பி‘
அடிப்பதற்காக ஜன்னல் வழியாக ‘பிட்‘டுகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர்
புத்தகத்தின் சில பகுதிகளை அப்படியே கிழித்து கொடுத்தனர்.ஜன்னல் ஓரம் இருந்த மாணவர்கள் அவற்றை வாங்கிக்கொண்டு கருமமே கண்ணாக காப்பி அடிக்கும் வேலையை தொடங்கினார்கள்.
மேலே
ஜன்னல்களில் ஏற முடியாதவர்கள், கீழே நின்றபடி ‘பிட்‘ காகிதங்களை சுருட்டி
உள்ளே வீசினார்கள். இன்னும் சிலர் நீண்ட கம்பின் நுனியில் வைத்து ஜன்னல்
வழியாக உள்ளே கொடுத்தார்கள்.
அதிர்ச்சி
இந்த
அரிய காட்சியை, ரோட்டில் சென்று கொண்டிருந்தவர்கள், ‘பரீட்சையில்
இதெல்லாம் சாதாரணமப்பா‘ என்பது போல் கண்டும் காணாமல் சென்றனர். ஆனால் அந்த
வழியாக சென்ற பத்திரிகை புகைப்படக்காரர்கள் இந்த அபூர்வ காட்சியை படம்
பிடித்து, பீகாரில் பள்ளிக்கூட தேர்வு எப்படி நடக்கிறது? என்பதை
வெளியுலகுக்கு அம்பலப்படுத்தினார்கள். அதைப்பார்த்த பலரும் அதிர்ச்சி
அடைந்தனர்.
கல்வி மந்திரியின் சமாளிப்பு
இதுபற்றி பீகார் மாநில கல்வி மந்திரி பி.கே.சாகியிடம் நிருபர்கள்
கேட்டதற்கு, மாணவர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பீகாரில்
நேர்மையாக தேர்வை நடத்துவது என்பது முடியாத காரியம் என்றும், இது அரசுக்கு
மிகவும் சவாலான பிரச்சினை என்றும் சாதாரணமாக கூறினார்.







