பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பிட் அடித்தால், அந்த அறையின்
மேற்பார்வையாளரான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை
அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது, ஆசிரியர்களிடையே அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு
பொதுத்தேர்வுகள் நடந்து வருகிறது. இதில், முறைகேடு நடக்காத வகையில் பல்வேறு
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வு அறையில் பணியில் உள்ள
ஆசிரியர்களுக்கு நாற்காலிகள் போடக்கூடாது என்பது உள்ளிட்ட சில உத்தரவுகள்
தேர்வின் துவக்கத்திலேயே அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது
ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அலுவலர்கள் அனுப்பிய சுற்றறிக்கையில், தேர்வு
அறையில் பிட் வைத்திருந்து மாணவன் பிடிபட்டால், சம்பந்தப்பட்ட
மேற்பார்வையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. இது, ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘தேர்வு
அறையில் மாணவர்களை ஒரு அளவுக்கு மேல் சோதிக்க முடியாது. மாணவிகளை
ஆசிரியர்கள் சோதிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில்,
மாணவர்கள் பிட் கொண்டு வருவதற்கு மேற்பார்வையாளர் எந்த வகையில் பொறுப்பாக
முடியும். தேர்வு அறையில் மாணவர்கள் பிட் அடிப்பதை தவிர்க்க கண்காணிப்பை
தீவிரப்படுத்த அதிகாரிகள் உத்தரவிடலாம். பறக்கும் படையினரை கூடுதலாக
நியமித்து, தீவிர சோதனை நடத்தி, பிட் கொண்டு வரும் மாணவர்களை பிடித்து
நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், இதை விட்டுவிட்டு, மேற்பார்வையாளர் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகளின் இதுபோன்ற
மிரட்டல் உத்தரவுகளால், ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு
ஆளாகியுள்ளனர். எனவே, இந்த உத்தரவை கல்வித்துறை திரும்ப பெற வேண்டும்,’
என்றனர்.நன்றி தினகரன்







