தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் சார்பில் வெள்ளிவிழா மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டை கவர்னர் கே.ரோசய்யா தொடங்கி வைத்து வெள்ளி விழா மலரை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
அங்கீகாரம்
*அங்கீகாரம் பெற்று 10 வருடங்கள் ஆன பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.
*அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், சைக்கிள், லேப்டாப், தேர்வுக்கட்டண சலுகை , கல்வி உதவித்தொகை ஆகியவற்றை தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் வழங்க வேண்டும்.
*சமச்சீர் கல்வி பாடபுத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விலை இன்றி கொடுக்க வேண்டும்.
*பாட புத்தகங்களை வழங்குவதில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் கால தாமதத்தை தவிர்க்க வேண்டும்.
8-வது வகுப்பில் கட்டாய தேர்ச்சி
* 8-வது வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரும் தேர்ச்சி என்பது கட்டாயம். அதனால் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் படிக்கத் தெரியாமலும் எழுதத் தெரியாமலும் இருக்கிறார்கள்.
*8-வது வகுப்பில் தேர்ச்சி பெற்று 9-வது வகுப்புக்கு அனைத்து மாணவர்களும் சென்று விடுகிறார்கள். இதனால் 9-வது வகுப்பில் சில மாணவர்கள் எழுதத் தெரியாமல் விழிக்கிறார்கள். படிக்கத் தெரியாமல் உள்ளார்கள். அவர்கள் 9-வதுவகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பிறமாணவரை பார்த்து எழுதுதல், துண்டுச்சீட்டில் எழுதிக்கொண்டு தேர்வு எழுதுதல் போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
ரத்து செய்ய வேண்டும்
*8-வது வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்று சட்டம் இருப்பதால் மாணவர்களிடம் நல் ஒழுக்கம் இல்லாமல் போய்விடுகிறது. இந்த நிலை மாறவும் மாணவர்கள் நலன் கருதியும் 8-வது வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பதை ரத்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் தரமான ஒழுக்கமான மாணவர் சமுதாயம் உருவாகும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில்
மாநாட்டில் மாநில கல்வி ஆலோசகர் புருசோத்தமன், காமராஜ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி கே.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.








