கால்நடை மருத்துவப் படிப்புகளில்
2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு ஆன்-லைன் பதிவு
முறையை அறிமுகப்படுத்த தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
முடிவு செய்துள்ளது. இதற்கான மென்பொருள் தயாரிக்கும் பணியை பல்கலைக்கழகம்
இப்போது தீவிரப்படுத்தியுள்ளது.தமிழகத்தில், சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக்
கல்லூரி, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்
கல்லூரிகளில் மொத்தமுள்ள 280 பி.வி.எஸ்சி. இடங்கள், தலா 20 இடங்களைக் கொண்ட
பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழி வளர்ப்பு தொழில்நுட்பம்,
பி.டெக். பால் தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான
கலந்தாய்வை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்தி
வருகிறது.
இந்தப் படிப்புகளில் 2015-16 கல்வியாண்டு மாணவர்
சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற ஜூலை மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க ஆன்-லைன் பதிவு முறையை அறிமுகம் செய்ய பல்கலைக்கழகம்
திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு.திலகர் "தினமணி'க்கு அளித்த பேட்டி:
கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு
விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்தும் வகையில், முதன்முறையாக ஆன்-லைன்
பதிவு முறையை 2015-16 கலந்தாய்வில் அறிமுகம் செய்ய முடிவு
செய்யப்பட்டுள்ளது.
எனவே, மையங்கள் மூலமான விண்ணப்ப விநியோகம் என்பது இருக்காது.
கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள்,
www.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் ஆன்-லைனில் விவரங்களைப்
பதிவு செய்ய வேண்டும்.
பின்னர், அந்த விண்ணப்பத்தைப் பிரதி எடுத்து, உரிய
சான்றிதழ் நகல்கள், கட்டணத்துக்கான காசோலை ஆகியவற்றை இணைத்து தபால் மூலம்
சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கான மென்பொருள் தயாரிக்கும் பணி இப்போது
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு, சான்றிதழ்களை ஸ்கேன்
எடுத்து அனுப்புவதில் சிரமம் ஏற்படும் என்ற காரணத்தால் ஆன்-லைன் பதிவு
முறை மட்டும் இப்போது அறிமுகம் செய்யப்படுகிறது.
அடுத்து வரும் ஆண்டுகளில் முழுவதும் ஆன்-லைன் விண்ணப்ப
முறை அறிமுகப்படுத்தப்படும். அப்போது சான்றிதழ்களை ஸ்கேன் எடுத்து
ஆன்-லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதோடு கட்டணத்தையும் ஆன்-லைனில்
செலுத்தும் நடைமுறை அறிமுகம் செய்யப்படும் என்றார்.








