மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான
பயணப்படி உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11-ஆம் தேதி
சென்னையில் பேரணி நடத்தப்போவதாக பார்வையற்ற ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல்.ரவீந்திரன் சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் பார்வையற்ற ஆசிரியர்கள் சுமார்
2,000-க்கும் மேற்பட்டோர் பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு போக்குவரத்து பயணப்படியாக மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு
வருகிறது. எனினும் விடுமுறை நாள்களுக்கு பயணப்படி பிடித்தம்
செய்யப்படுகிறது. இதனால் பார்வையற்ற ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளாவதால்
தமிழக அரசு இதைக் கைவிட வேண்டும்.
மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக பார்வையற்ற
ஆசிரியர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும். பல்வேறு தேவைகளுக்கு,
மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை மருத்துவ சான்றிதழுக்குப் பதிலாக
ஏற்றுக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும்
11-ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னையில் எழும்பூரில் பேரணி நடைபெறும்.
இந்தப் பேரணியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 500-க்கும் மேற்பட்ட பார்வையற்ற ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார்.
பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.விஜயகுமார், பொருளாளர் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.








