பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள்
நாளை(வியாழக்கிழமை) வெளியாக உள்ள நிலையில், மாநில அளவில் தேர்ச்சி
சதவீதத்தில் விருதுநகர் மாவட்டம் இழந்த முதலிடத்தை பெறுமா என்கிற
எதிர்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் இத்தேர்வு கடந்த மார்ச் 5-ம் தேதி
தொடங்கி, 31-ம் தேதி வரையில் நடைபெற்றது. இத்தேர்வை விருதுநகர்
மாவட்டத்தில் 75 மையங்களில் 192 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள்
பங்கேற்று தேர்வு எழுதினார்கள். அதில், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில்
மாணவர்கள்-3597, மாணவிகள்-3628 என மொத்தம் 7225 பேர்களும்,
ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் மாணவர்கள்-3367, மாணவிகள்-3944 என
7311 பேர்களும், விருதுநகர் கல்வி மாவட்டத்தில் மாணவர்கள்-3462,
மாணவிகள்-4368 என 7830 பேர்களும் மொத்தம் 22366 தேர்வில் பங்கேற்றனர்.
இந்நிலையில், இத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை காலை 10
மணியளவில் வெளியாகவுள்ளதால் மாணவ, மாணவிகள் எதிர்பார்த்துள்ளனர்.
இம்மாவட்டம் 1985ல் தொடங்கியது முதல், தொடர்ந்து 2013 ஆண்டு வரையில் கடந்த
28 ஆண்டுகளாக பிளஸ்டூ தேர்வு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் முதலிடம்
பெற்று வந்தன. அதைத் தொடர்ந்து கடந்தாண்டு முதல் மாநில அளவில் முதலிடத்தை
தக்க முடியாத நிலையில் 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டன. எனவே நிகழாண்டில் இழந்த
முதலிடத்தை பிடிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த வகையில் நன்றாக படிக்க கூடிய மாணவ, மாணவிகளுக்கு
அதிக மதிப்பெண்கள் எடுக்கும் வகையில் சிறப்பு கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள் எளிதாக புரியும் வகையில் பாடங்களை கற்பிப்பது தொடர்பாக
பல்வேறு கட்டங்களாக பயிற்சியும் அளிக்கப்பட்டன. வருகை குறைந்த மாணவ,
மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் ஆலோசனையும், அதேபோல், தேர்ச்சி
குறைந்த பள்ளிகளுக்கு வழிமுறை கையேடு மூலம் மாணவ, மாணவிகளுக்கு புரியும்
வகையில் ஆசிரியர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். இதுபோன்ற காரணங்களால் இழந்த
முதலிடத்தை மீண்டும் பெறும் நம்பிக்கையில் பெற்றோர்கள் மற்றும் சமூக
ஆர்வலர்கள் ஆகியோர் எதிர்பார்த்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
வி.ஜெயக்குமார் கூறுகையில், நடமாடும் ஆலோசனை மையம் அமைத்து ஆலோசகர் மூலம்
ஒவ்வொரு பள்ளிக்கும் நேரில் சென்று மாணவர் குறைகளை அறி்ந்து, எம்மாதிரி
பாடங்களை படித்தால் தேர்ச்சி பெறலாம் என்கிற அறிவுரையும், கற்றலில்
பின்தங்கியோருக்கு கம்யூட்டர் புரொஜக்டர் மூலம் பாடங்கள் கற்பித்தும்,
மடிக்கணினிகளில் குறுந்தகடுகளை பயன்படுத்தி படிக்கவும் ஏற்பாடு
செய்யப்பட்டன. இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் பட்டதாரி சிறப்பு ஆசிரியர்களை
நியமித்து மாலை நேரங்களில் முக்கிய பாடங்களில் சிறப்பு பயிற்சி அளிக்கவும்
ஏற்பாடு செய்யப்பட்டது. காலாண்டு, அரையாண்டு திருப்புதல் தேர்வுகளில்
பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு,
தேர்ச்சி பெறுவதற்கு ஏற்ப முன்மாதிரி பயிற்சியும் அளித்து மாணவ, மாணவிகள்
தேர்வுக்கு தயார் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.







