வேலைவாய்ப்புத்துறை 'வெப்சைட்' 6 நாட்களாக முடங்கியதால் பதிவுதாரர்கள்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு
வருகின்றனர்.கல்வித்துறையில் 4,320 ஆய்வக உதவியாளர்களும்
மருத்துவத்துறையில் 676'லேப் டெக்னீசியன்' பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
ஆய்வக உதவியாளர் பணி நியமனத்திற்கு வேலைவாய்ப்பக பதிவுமூப்பு
சீனியாரிட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் விண்ணப்பதாரர்கள் ஒரே சமயத்தில் தங்களது பதிவுமூப்பு விபரத்தை
தெரிந்து கொள்ள வேலைவாய்ப்புத்துறை www.tnvellaivaippu.in 'வெப்சைட்டை'
பார்க்கின்றனர்.அதேபோல் 'லேப்டெக்னீசியன்' பணியிடங்களுக்கும் மாநில அளவிலான
பதிவுமூப்பு விபரம் வேலைவாய்ப்புத்துறை 'வெப்சைட்'டில்
வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் 'வெப்சைட்' 6 நாட்களாக செயல்படவில்லை.இதனால்
பதிவு தாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு
வருகின்றனர்.பாதிக்கப்பட்டோர் கூறுகையில், ''வேலைவாய்ப்பக அட்டையை
பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. 'லேப்டெக்னீசியன்' பணிக்கான பதிவுமூப்பு
விபரம் சரிபார்க்க முடியவில்லை,'' என்றனர்.வேலைவாய்ப்பு
அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிளஸ் 2 'ரிசல்ட்' வெளியிட்டபின், பள்ளிகளில்
'ஆன்லைன்' மூலம் மாணவர்களின் பதிவுமூப்பு விபரம் பதியப்பட உள்ளது.
வேலைவாய்ப்புத்துறை 'வெப்சைட்டில்' சில மாற்றங்கள் செய்வதால் 'வெப்சைட்'
இயங்கவில்லை. விரைவில் சரிசெய்யப்படும். அதுவரை வேலைவாய்ப்பக அலுவலகங்களில்
பதிவு மூப்பை சரிபார்த்து கொள்ளலாம், என்றார்.







