மருத்துவ கல்லுாரிகளை மூடும் முடிவை கைவிட்ட, இ.எஸ்.ஐ., நிர்வாகம்,
மாணவர் சேர்க்கை நடத்த வசதியாக, கல்லுாரிகளில் காலியாக உள்ள, பேராசிரியர்
பணியிடங்களை நிரப்புகிறது.தமிழகத்தில், சென்னை, கோவை உட்பட, நாடு
முழுவதும், 13 இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. நிதிச்சுமையால்
திணறிய, இ.எஸ்.ஐ., நிர்வாகம், மாணவர் சேர்க்கை நிறுத்தி விட்டு,
கல்லுாரிகளை மூடும் முடிவுக்கு வந்தது.மாணவர்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்ததால், கல்லுாரிகளை மூடும் முடிவை கைவிட்டதோடு, 'நடப்பு
ஆண்டில் வழக்கம் போல் மாணவர் சேர்க்கப்படுவர்' என, அறிவித்தது. ஆனால்,
'தொழிலாளர்களின் மருத்துவ சேவைக்காக துவக்கப்பட்ட, இ.எஸ்.ஐ., நிர்வாகம்,
சேவையில் கவனம் செலுத்த வேண்டும்; கல்லுாரிகளை செயல்படுத்தி, மீண்டும் ஒரு
தவறை செய்யக்கூடாது' என, இ.எஸ்.ஐ., சந்தாதாரர்கள், சென்னை
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
'மாணவர்
சேர்க்கை நடந்தாலும், நீதிமன்ற தீர்ப்பு உட்பட்டது' என,
தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இதனால், மாணவர்களிடம், குழப்பம்
ஏற்பட்டது.இந்நிலையில், 'எந்த சிக்கலும் இன்றி, மாணவர் சேர்க்கை நடக்கும்'
என, இ.எஸ்.ஐ., இயக்குனரகம் அறிவித்துள்ளது.
கல்லுாரிகள்
மூடும் முடிவால், காலியாக இருந்த பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல்
இருந்த நிர்வாகம், தற்போது, அவற்றை நிரப்பும் முயற்சியில் இறங்கி
உள்ளது.சென்னை, கே.கே.நகர் - 25 பேர்; மேற்கு வங்கம் - 30 பேர்; கர்நாடகா,
குல்பர்கா - 27; கர்நாடகா, பெங்களூரு - 13 பேர் என, நான்கு
மருத்துவக்கல்லுாரிகளிலும், பேராசிரியர், இணை பேராசிரியர், துணை
பேராசிரியர் என, மொத்தம், 95 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.'இந்த
இடங்களில் பணியாற்ற, ஜூன், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என,
இ.எஸ்.ஐ., இயக்குனரகம் அறிவித்துள்ளது.







