தங்க பதக்கம்வி.ஐ.டி., பல்கலை தின விழா மற்றும் ஆண்டு விளையாட்டு தின பரிசளிப்பு விழா, வேலூரில் நேற்று நடந்தது. வி.ஐ.டி., மாணவர் பிரதிநிதி ரிச்சி ராய் வரவேற்றார். பல்கலை துணை வேந்தர் ராஜு, ஆண்டறிக்கை வாசித்தார். விளையாட்டு வீரர்களுக்கான தங்கப் பதக்கத்தை, தாமினி அகர்வாலுக்கு, வேந்தர் விசுவநாதன் வழங்கி பேசியதாவது:இந்தியாவின் மொத்த வருவாயில் கல்விக்காக, 4 சதவீதம், உயர் கல்விக்காக, 1 சதவீதம் செலவழிக்கப்படுகிறது. ஆனால், வளர்ந்த நாடான அமெரிக்காவில், ஒரு மாணவனுக்கு, 25 ஆயிரம் டாலர் செலவழிக்கின்றனர். கல்விக்காக செலவழிக்கப்படும் தொகையை அதிகப்படுத்த வேண்டும்.
ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து, இரண்டு லட்சம் மாணவர்கள், வெளிநாடுகளுக்கு சென்று படிக்கின்றனர். இந்தியாவில், கல்வி கட்டமைப்பு வசதிகளை பெருக்கினால், 40 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள், இந்தியாவுக்கு வந்து கல்வி கற்கும் வாய்ப்பு உள்ளது. உலக மக்களுக்கு கல்வி வழங்கக் கூடிய பெரிய வாய்ப்பு, வசதி நம்மிடம் உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, வி.ஐ.டி., மாணவ, மாணவியருக்கு, 6 கோடியே, 28 லட்ச ரூபாய், கல்வி உதவித் தொகையை, வேந்தர் விசுவநாதன் வழங்கினார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, 'இண்டியா டுடே' ஆசிரியர் அருண் பூரி
பேசியதாவது:கடந்த, 10 ஆண்டுகளில், ஊடகத் துறை, மிகப் பெரிய அளவு வளர்ச்சியைப் பெற்றுஉள்ளது. ஊடகம் இல்லாமல் கிராமங்கள், நகரங்களில் மனிதர்களால் வாழவே முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. பெரிய வியாபார நிறுவனங்கள், மொபைல் போனில் விளம்பரம் செய்து கிராமம், நகரங்களில் மிகப் பெரிய வியாபார வாய்ப்புகளை பெருக்கிக் கொண்டுள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.
மதுரை தியாகராஜா
பொறியியல் கல்லூரி தலைவர் கருமுத்து கண்ணன், வி.ஐ.டி., துணைத் தலைவர்கள் சேகர் விசுவநாதன், சங்கர் விசுவநாதன், செல்வம், இணை துணை வேந்தர்கள் ஆனந்த் சாமுவேல், நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.








