அனைத்து ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங்
ஜூலை 1 முதல் 4ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும்
தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் 400 உள்ளன. இவற்றில் உள்ள 15,000
இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங் ஜூலை 1ம் தேதி தொடங்கி 4ம் தேதி
வரை நடக்கிறது.
மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் இணைய தளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆன்லைன் மூலம் கவுன்சலிங் நடத்தப்பட்டு
மாணவர்களுக்கான சேர்க்கை உத்தரவுகள் வழங்கப்படும். கவுன்சலிங்கில் கலந்து
கொள்ள வேண்டிய மாணவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் இன்று முதல் தபாலில்
அனுப்பி வைக்கப்படும். அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெற்றவர்கள் அனைத்து
சான்றிதழ்களையும் எடுத்து வர வேண்டும்.
இதையடுத்து, ஜூலை 1ம் தேதி ஆங்கிலம், தெலுங்கு, உருது ஆகிய பாடப்பிரிவுகளை
படிக்க விரும்புவோருக்கு முதற்கட்டமாக மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட
சிறப்பு பிரிவினருக்கும், தொழிற்பிரிவு மற்றும் அறிவியல் பாடப் பிரிவு
மாணவர்களுக்கும் கவுன்சலிங் நடக்கிறது. 2ம் தேதி தொழிற்கல்வி பிரிவு
மாணவியருக்கும், கலைப் பிரிவு மாணவியருக்கும் கவுன்சலிங் நடக்கிறது. 3
மற்றும் 4ம் தேதி அறிவியல் பிரிவு மாணவியருக்கு கவுன்சலிங் நடக்கிறது.
கவுன்சலிங் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில்
தொடங்கும். தகுதியுள்ளவர்களின் ரேங்க் பட்டியல், கவுன்சலிங் நடக்கும்
மாவட்டம், இடம் அனைத்தும் www.tnscert.org என்ற இணைய தளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. கவுன்சலிங்கில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் SWS
2015-16 என்ற இணைப்பில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து
இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.







