ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசின் முழு செலவில், தனியார்
பள்ளிகளில் சேர்ந்து படிக்க உள்ள ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ,
மாணவியருக்கான தேர்வுகள் துவங்கின.
ஆதிதிராவிட, பழங்குடியின
மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க, தனியார் பள்ளிகளில் சேர்க்கும்
திட்டத்தை, அத்துறை, ஆறு ஆண்டாக செயல்படுத்தி வருகிறது.
இதில், 6ம்
வகுப்பு; 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை என, இரு பிரிவு உள்ளது.
தமிழகத்தில் உள்ள, 385 வட்டாரங்களில், அரசு பள்ளிகளில், 5ம் வகுப்பு படித்த
ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களில், தலா ஒருவர் வீதம், தேர்வு மூலம்
தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசு செலவில் படிக்க வைக்கப்படுவர். பிளஸ் 2 வரை,
இவர்களுக்கான முழுச் செலவையும் அரசு ஏற்கும்.
திட்டத்தின் மற்றொரு
பிரிவாக, அரசு பள்ளிகளில் படித்து, 10ம் வகுப்பு பொது தேர்வில் அதிக
மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களில், மாவட்டத்திற்கு, 10
பேர் வீதம் தேர்வு செய்யப்படுவர். அவர்களை சிறந்த தனியார் பள்ளிகளில்,
பிளஸ் 1 சேர்த்து, கல்வி செலவு அனைத்தும் அரசு ஏற்கிறது. இதற்காக,
ஆண்டிற்கு, 1.80 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இந்த திட்டங்களுக்கான
தேர்வு தற்போது துவங்கியுள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர்
கூறுகையில், 'எல்லா மாவட்டங்களிலும் தேர்வு முடிந்ததும், மாணவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டு, 'அட்மிஷன்' நடைபெறும்' என்றார்.







