வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் அரசு கட்டடங்களில் சேதமடைந்துள்ள மழைநீர்சேகரிப்பு அமைப்பை சீரமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் மாநிலம் முழுதும் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைக்கப்பட்டது. வீணாகும் மழைநீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்தது. இத்திட்டத்தை தொடர வேண்டும் என அரசு முடிவெடுத்துள்ளது.
முதற்கட்டமாக அரசு கட்டடங்களில் சேதமடைந்துள்ள மழைநீர் சேகரிப்பை சீரமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“அரசு கட்டடங்களில் குழாய் சேதம் உள்ளிட்ட காரணங்களினால் சேதமடைந்துள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பு குறித்து பொதுப்பணித்துறையினர் மூலம் கணக்கெடுக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் அவை சீரமைக்கப்படும். மழைநீரை கூடுதலாக பூமியில் சேமிப்பதால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு ஏற்படும்,”என்றார்.







