ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை பதவிகளுக்கான, 1,129
காலியிடங்களுக்கு, சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு வரும், 23ம் தேதி
நடக்கிறது. இதில், 9.5 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வு, நாடு
முழுவதும், 71 நகரங்களில் நடக்கிறது.
தமிழகத்தில் சென்னை, மதுரை,
கோவை, திருச்சி மற்றும் வேலுாரில் நடக்கிறது. புதுச்சேரியிலும் தேர்வு
மையங்கள் அமைக்கப்பட உள்ளன. காலையில், இரண்டு மணிநேரம், முதல் தாள்;
பிற்பகலில், இரண்டாம் தாள் தேர்வு நடத்தப்படும். இரண்டாம் தாளில்,
கட்டாயம், 33 சதவீத மதிப்பெண் எடுத்தால் மட்டுமே மதிப்பெண் அடிப்படையில்
மெயின் தேர்வு எழுத முடியும்.
இரண்டு தாள்களிலும், 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள் இடம்பெறும். வினாத்தாள், ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும்.
இந்த
தேர்வில், தவறான விடைக்கு, 'மைனஸ்' மதிப்பெண் முறை உண்டு. அதாவது, மூன்று
தவறான விடைக்கு, ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். அல்லது ஒரு தவறான விடைக்கு,
0.33 மதிப்பெண் குறைக்கப்படும். தேர்வு அறைக்குள் விடைத்தாள் வைப்பதற்கான
அட்டை மற்றும் பேனா தவிர, வேறு எந்த பொருளையும் கொண்டு செல்ல தடை
விதிக்கப்பட்டு உள்ளது.