புதிய கல்லூரி: சென்னையில் உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மருத்துவமனையின் மற்றொரு பகுதியில் ரூ. 212 கோடி செலவில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்தக் கல்லூரியின் சார்பு மருத்துவமனையாக செயல்படுவதற்காக சென்னை திருவல்லிக்கேணியில் செயல்பட்டு வந்த கஸ்தூர்பா காந்தி அரசு தாய் சேய் நல மருத்துவமனை பொது மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
100 இடங்கள்: புதிய மருத்துவக் கல்லூரிக்கு 100 இடங்களை தமிழக அரசு நிர்ணயித்தது. இந்த நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அனுமதியும் அளித்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் 20-ஆவது அரசு மருத்துவக் கல்லூரியான ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. மாணவர் சேர்க்கைக்காக நடைபெற்ற இரண்டு கட்ட கலந்தாய்வில் மாநில அரசின் ஒதுக்கீட்டில் 85 இடங்கள் நிரப்பப்பட்டன.
திறப்பு விழா: பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று, மாணவர் சேர்க்கை முடிந்துவிட்ட நிலையில் மருத்துவக் கல்லூரியை திறப்பதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறை செய்து வருகிறது.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியது:
கல்லூரியில் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துவிட்டன. கல்லூரிக்கான திறப்பு விழா செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிகிறது. கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.
திறப்பு விழா நடைபெற்று முடிந்ததும், முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.








