‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’
தபால் அலுவலகங்களில் கடந்த பிப்ரவரி மாதம் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு தமிழகத்தில் வரவேற்பு கிடைக்கும் வகையில் 10 லட்சத்து 60 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆண் குழந்தைகள் பயன்பெறும் வகையிலும் சேமிப்பு திட்டத்தை தொடங்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பில் இருந்து தபால் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டன.
இதுகுறித்து சென்னை வட்ட தபால் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியதாவது:-
8.7 சதவீதம் வட்டி
10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாவலர் உதவியோடும், 10 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகள் தானாகவே வந்து பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. குறைந்த பட்சம் ரூ.100 பணம் செலுத்தி கணக்கை தொடங்கலாம். கணக்கு தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.
குறைந்த பட்சம் ரூ.500 மற்றும் அதிகபட்சம் முதலீடாக ரூ.1½ லட்சம் வரை ஒரு ஆண்டில் சேமிக்கலாம். இந்த சேமிப்பு கணக்குகளுக்கு 8.7 சதவீதம் வட்டி தற்போதைய நிதியாண்டில் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. கணக்கு தொடங்கிய உடன் 3-வது ஆண்டில் இருந்து கடன் வசதியும் உள்ளது.
சென்னையில் இன்று தொடக்கம்
கணக்கு தொடங்கியதில் இருந்து 7-வது ஆண்டில் இருந்து 50 சதவீத தொகையை பெற்றுக்கொள்ளலாம். இதை திருப்பி செலுத்த வேண்டியதில்லை. 15 ஆண்டுகள் முடிந்த உடன் கணக்கை முடித்துக் கொள்ளலாம். இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80-சி பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதுடன், உரிய வட்டியும், வட்டிக்கு வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது.
இந்த வைப்பு நிதி திட்டத்தில் இணைய பி-பிரிவில் வரும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களையும் அணுகலாம். பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தின் தொடக்க விழா முதல் கட்டமாக சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழக அஞ்சல் வட்ட அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தொடர்ந்து சென்னை வட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் இன்று கணக்குகள் தொடங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.








