இந்த ஆண்டு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 6,402 ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றனர்.
இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் காலிப் பணியிடங்கள் குறைவாக இருந்ததால் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. உபரியாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் 2,307 பேர் பணி நிரவல் மூலம் இடமாறுதல் செய்யப்பட்டனர்.
இந்த இடங்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் கோருகின்றனர்.
ஆனால், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 4, 5 மாவட்டங்களில் மட்டுமே அதிகக் காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பணி நிரவல் கலந்தாய்வின் போதே அனைத்து காலியிடங்களும் காட்டப்பட்டு, வெளிப்படையாக இடமாறுதல்கள் வழங்கப்பட்டன. இப்போது குறைவான காலியிடங்களே உள்ளதால், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை இந்த ஆண்டு நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். எனினும், கலந்தாய்வு குறித்து இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.








