கல்லுாரி கல்வி இயக்குனராக (பொறுப்பு), ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்
சேகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழகத்திலுள்ள, 800 கலை மற்றும் அறிவியல்
கல்லுாரிகளில், 2.25 லட்சம் பேர் படிக்கின்றனர்; 10 ஆயிரம் ஆசிரியர்கள்
பணியாற்றுகின்றனர். கல்லுாரிகளை கட்டுப்படுத்தும், கல்லுாரி கல்வி
இயக்குனர் பதவிக்கான நியமனத்தில், சில ஆண்டுகளாக தொடர்ந்து குளறுபடிகள்
நடக்கின்றன.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக, கல்லுாரி கல்வி இயக்குனராக,
செய்யாறு கலைக் கல்லுாரி முதல்வர் தேவதாஸ், கூடுதல் பொறுப்பில்
பணியாற்றினார். சில மாதங்களுக்கு முன், அவருக்கே தெரியாமல், தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் பேராசிரியர் சேகரை, கல்லுாரி கல்வி
இயக்குனராக, உயர்கல்வித் துறை செயலகம் நியமித்தது.
இதை எதிர்த்து,
தேவதாஸ் வழக்கு தொடர்ந்து, மீண்டும் இயக்குனர் பொறுப்பை பெற்றார்; தேவதாஸ்
நேற்று ஓய்வு பெற்றார்.இதையடுத்து, கல்லுாரி கல்வி இயக்குனர் பொறுப்பையும்
கவனிக்க, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் சேகருக்கு உத்தரவிடப்பட்டு
உள்ளது.
இதுகுறித்து, கல்லுாரி கல்வி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர்
சிவராமன் கூறும் போது, ''கூடுதல் பொறுப்பிலேயே இயக்குனர்
நியமிக்கப்படுவதால், நிர்வாக பணிகளில் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
காலியிடங்களை நிரப்பவில்லை. பேராசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்
நடத்தவில்லை,'' என்றார்.