இதன்மூலம் இந்தியா அறிவியல் ஆய்வுக்கு ஏற்ற இடமல்ல என்ற மாயையை உடைத்தவர். ராமன் தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் உள்ள திருவானைக்காவலில் 1888, நவம்பர் 7-ம் தேதி, சந்திரசேகர்- பார்வதி தம்பதிக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். இவரது முழுப்பெயர் சந்திரசேகர வேங்கட ராமன். இவருடைய தந்தையும் கணிதம் மற்றும் இயற்பியலில் பேராசிரியராக இருந்தார். ராமனுக்கு இயற்பியல் மீது ஆர்வம் வர அவர் தந்தையும் ஒரு காரணம்.
அந்த வேலையைப் பார்த்துக்கொண்டே கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் வளர்ச்சி கழகத்தில் படிப்பை தொடர்ந்தார். கூடவே ஒலி அதிர்வுகள் பற்றியும், இசைக் கருவிகளின் கோட்பாடு பற்றியும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இவரது அறிவியல் ஆர்வத்தைக் கண்டு கொல்கத்தா பல்கலைக்கழகம் 1917-ல் இவருக்கு இயற்பியல் பேராசிரியர் வேலையைக் கொடுத்தது.
அங்கு இவர் பணியாற்றிய 16 ஆண்டு காலம் இவரது ஆய்வின் பொற்காலம் என்று சொல்லலாம். 1926-ல் இந்திய இயற்பியல் வெளியீடு என்ற பத்திரிகையை தொடங்கி, இவரது படைப்புகளை அதில் இடம் பெறச் செய்தார். 1928-ல் இந்திய அறிவியல் பேரவையின் தலைவராக ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய பிரிட்டிஷ் அரசு ராமனின் விஞ்ஞானப் படைப்புகளை பாராட்டி ‘சர்’ என்ற பட்டத்தை 1929-ல் வழங்கியது.
அதற்கு அடுத்த வருடம் 1930-ல் தான் கிட்டத்தட்ட 9 வருடங்களாக அவர் ஈடுபட்டிருந்த ஒளிச் சிதறல்கள் பற்றிய ஆய்விற்காக நோபல் பரிசு கிடைத்தது. அதன் பின்பு அவர் உலகம் முழுவதும் அறியப்பட்டார். இந்த ஆய்விற்கான தூண்டுதலை அவருக்கு ஏற்படுத்தியது கடல்தான்.
1921-ல் பிரிட்டனில் நடந்த ஒரு அறிவியல் பேரமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு மீண்டும் இந்தியா திரும்பிய போது, கடல் நீரின் நீல நிறம் அவரை சிந்திக்க வைத்தது. கடலுக்கு நீல நிறம் எப்படி வந்தது என்ற சித்தாந்தத்தில் உருவானதே ஒளிச் சிதறல் கோட்பாடு. இது இயற்பியலில் ‘ராமன் விளைவுகள்’ என்று இவரது பெயராலே அழைக்கப்படுகிறது.
நோபல் பரிசு பெற்ற பின் 1934-ல் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் கல்லூரியில் இயற்பியல் துறை தலைவராக பொறுப்பேற்றார். அதன்பின்னும் அவரது ஆய்வு தொடர்ந்து கொண்டே இருந்தது. 1948-ல் இந்திய விடுதலைக்குப் பின் பெங்களூரில் அவரது பெயரில் ராமன் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் என்ற ஆய்வுக் கூடத்தை இந்திய அரசு ஏற்படுத்தி அதன் தலைவராக ராமனையே நியமித்தது. 1970 நவம்பர் 21-ல் அவர் இறக்கும் வரை அதன் தலைவராக ராமனே இருந்தார். ஒரு தமிழர் இந்த அளவு உயர்ந்த நிலை அடைந்ததில் நமக்கு பெருமை தானே!








