ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கை குறித்தும், டிச., 28ம் தேதி மறியல்
போராட்டம் குறித்தும், வரும் 1ம் தேதி ஜாக்டோநிர்வாகிகள், தலைமைச்
செயலகத்தில் மனு அளிக்க உள்ளனர்.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து,
மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம், ஆசிரியர்களுக்கு
பாதுகாப்பு சட்டம், தமிழை முதல் பாடமாக்க அரசாணை உள்ளிட்ட, 15 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான ஜாக்டோ,
கடந்த பிப்ரவரி முதல் போராட்டம் நடத்துகிறது.
அக்., 8ல் ஜாக்டோ நடத்திய, மாநில அளவிலான வேலை நிறுத்தத்தால்,
பள்ளிகள் செயல்படாமல் முடங்கின. ஆனாலும், அரசு அவர்களை அழைத்து பேச்சு
நடத்தவில்லை.இந்நிலையில், அடுத்த கட்டமாக டிச., 28 முதல் 30 வரை தொடர்
மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, வரும் 1ம் தேதி
தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வி முதன்மை செயலரை, ஜாக்டோ உயர்மட்டக் குழு
உறுப்பினர்கள் சந்தித்து, மனு அளிக்க உள்ளனர். அதன்பின், அரசு தரப்பில்
பேச்சு நடத்தினால் போராட்டத்தை வாபஸ் பெற, ஆசிரியர் குழு முடிவு
செய்துள்ளது.







