திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு, ஆன்லைன் மூலம் 300 ரூபாய்
டிக்கெட் பதிவு செய்யும் முறை மட்டுமே சமீப காலமாக அமலில் இருந்து வந்தது.
இதனால், பதிவு செய்யாமல் திருமலைக்கு வரும் பக்தர்கள் இலவச தரிசனத்தில்
மட்டுமே தேவஸ்தானத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால்
பெரிதும் சிரமம் ஏற்படுவதாக பக்தர்களிடம் இருந்து புகார்கள் வந்தன.
அதைத்தொடர்ந்து, ஏழுமலையான் தரிசனத்திற்கு 300 ரூபாய் டிக்கெட்
வினியோகிக்கும் வசதி இன்று முதல் தொடங்கப்பட்டது.
அதன்படி திருப்பதியில் ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக் கழக பஸ் நிலையம்
அருகே உள்ள திருமலை– திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சீனிவாசம்
தங்கும் விடுதியில் ஒரு கவுண்ட்டர் திறக்கப்பட்டது. அந்த கவுண்ட்டரை
திருமலை– திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் சதுலவாடி கிருஷ்ணமூர்த்தி காலை
திறந்து வைத்தார்.
இந்த கவுண்ட்டரில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் 5 ஆயிரம்
டிக்கெட்டுகள் வினியோகம் செய்யப்படும். ஏழுமலையானை தரிசிக்க வரும்
பக்தர்கள், இந்த கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கிக் கொண்டு திருமலைக்கு
சென்று, ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்.