தமிழக அரசின் சார்பில் ஆதரவற்ற முதியோருக்கு மாதாந்திர ஓய்வூதியமாக 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் பல்வேறு இடங்களில் தகுதியில்லாத போலியான நபர்களுக்கும் இது வழங்கப்பட்டதால், அரசுக்கு பலகோடி ரூபாய் வீண் செலவு ஏற்பட்டது. இதில் தணிக்கை செய்யப்பட்டதின் அடிப்படையில் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டு அவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் இப்பிரச்னையை எதிர்க்கட்சிகள் கையில் எடுப்பதை தவிர்க்க, தாசில்தார்கள் மூலம் நேரடி விசாரணை நடத்தி, தகுதியானவர்களுக்கு மீண்டும் ஓய்வூதியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,“ மீண்டும் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பிக்கும் முதியோர்களின் வீட்டிற்கு தாசில்தார்கள் நேரடியாக சென்று அவர்கள் ஆதரவற்றவர்களா, வேறு வருமானம் உள்ளதா என விசாரித்து, தகுதியிருப்பின் மீண்டும் அதை வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் அரசிற்கு பரிந்துரை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது,”என்றார்.








