தமிழகம் முழுவதும் பெய்து வரும்
மழையால் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு
நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்டத் தொடக்க, உதவித் தொடக்கக் கல்வி
அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் மின்னஞ்சலில் அனுப்பியுள்ள
சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பலத்த மழை காரணமாக பள்ளியின்
மேற்கூரையில் தண்ணீர் தேங்காமல் வைத்திருக்க வேண்டும். மேற்கூரையில் பழுது
ஏற்பட்டால், அதை உடனடியாக சரி செய்திட வேண்டும். பள்ளி வளாகத்தினுள்
மழைநீர் தேங்கியிருந்தால், அதை உடனடியாக மின் மோட்டார் மூலம் அகற்ற
வேண்டும்.
மழைக் காலங்களில் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் நீர்
நிரம்பியிருக்கும் என்பதால், அங்கு மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க
வேண்டும். மாணவர்களுக்கு நீர்ப் பிடிப்புப் பகுதிகளுக்குச் செல்வதால்
ஏற்படும் அபாயங்கள் குறித்தும் அறிவுறுத்திட வேண்டும்.
உணவு இடைவேளை, காலை, மாலை இடைவேளைகளில் மாணவர்களின்
பாதுகாப்பை உறுதி செய்தல், கீழ்நிலை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு
அருகில் மாணவர்களை அனுப்பாமல் இருத்தல், காய்ச்சி வடிகட்டிய நீரைப் பருக
அறிவுறுத்தல், மின் கசிவு இல்லாமல் பாதுகாப்புடன் மின் சாதனங்கள் உள்ளனவா
என்பதை உறுதி செய்தல்.
மேலும், இடி, மின்னல் போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக்
கொள்ளுதல், மழைக்கு மரங்களுக்கு அடியில் நிற்கக் கூடாது என்று மாணவர்களிடம்
எடுத்துக் கூற வேண்டும்.
இன்னும் சில தினங்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும்
என்பதால், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களும், உதவித் தொடக்கக் கல்வி
அலுவலர்களும் அவரவர் தலைமையிடத்தில் இருந்து, சூழ்நிலைக்கேற்றவாறு
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.








