தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளில்,
மாணவர்களுக்கு வழங்காமல் மாயமான, 10 ஆயிரம், 'லேப்டாப்'களுக்கான கணக்கை
சரிக்கட்ட முடியாமல், கல்வித்துறை அதிகாரிகள் தவித்து வருகின்றனர். மாயமான,
'லேப்டாப்'களுக்காக, 25 கோடி ரூபாயை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், சொந்த
பணத்தில் இருந்து செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில்,
அ.தி.மு.க., ஆட்சி வந்ததும், 2011 - 12 முதல், பிளஸ் 2 மற்றும்
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, அரசு சார்பில் இலவச, லேப்டாப்
வழங்கப்படுகிறது.இதுவரை, 22 லட்சம் மாணவர்களுக்கு, 5,500 கோடி ரூபாய்
மதிப்பில், லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால், ஒரு,
லேப்டாப்பின் மதிப்பு, 25 ஆயிரம் ரூபாய்.அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம், லேப்டாப்கள் வழங்கப்பட்டன. அதே
நேரத்தில், இதில், முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.
அதாவது,
*
பல பள்ளிகளில், மாணவர்கள் படித்து முடித்து சென்ற பின், அவர்களின்
பெயரில், லேப்டாப்கள் எடுக்கப்பட்டு, வெளி சந்தையில் விற்கப்பட்டுள்ளன
* பல பள்ளிகளில், பூட்டு உடைக்கப்பட்டு, லேப்டாப்கள் திருடு போயின
* போலி மாணவர்கள் பெயரில், லேப்டாப் அபகரிக்கப்படுகின்றன. இவ்வாறு புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, 'மாணவர்களின் ஆதார் எண்இருந்தால் மட்டுமே, லேப்டாப் வழங்க வேண்டும்; மாணவரின் கையெழுத்து
அவசியம்' என, கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.மேலும்,
ஐந்து ஆண்டுகளாக, தமிழ்நாடு மின்னணு நிறுவனமான, 'எல்காட்' சார்பில், பள்ளி
களுக்கு வழங்கப்பட்ட, லேப்டாப்களில், மாணவர்களுக்கு வழங்கப்பட்டவை;
திருப்பி அனுப்பப்பட்டவை; திருடு போனவை; வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவை
குறித்து, மாவட்ட வாரியாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.இதில், தமிழகம்
முழுவதும், 10 ஆயிரம், லேப்டாப்களின் கணக்கில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக,
கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கணக்கை எப்படி சரி செய்வது
என தெரியாமல், அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
'பிப்.,10க்குள் செலுத்த வேண்டும்':பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு:
* திருடு போனதாக கூறப்பட்ட, லேப்டாப்களுக்கான பணத்தை, தலைமை ஆசிரியர்களே ஏற்றுக் கொண்டு, பிப்.,10க்குள் செலுத்த வேண்டும்
*
சேதமான, லேப்டாப்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில்
சமர்ப்பிக்க வேண்டும்* மாணவர்களுக்கு வழங்கப்படாமல், கணக்கில் விடுபட்ட,
லேப்டாப்கள் குறித்து உரிய விளக்கம்
அளிப்பதுடன், அதற்கான செலவை ஏற்க வேண்டும். இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.10 ஆயிரம், லேப்டாப்களின் மதிப்பு, அரசின் திட்ட மதிப்பீட்டின் படி, 25 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
'எல்காட்' நிறுவன அதிகாரிகள் சோதனை:
இந்த
பிரச்னை குறித்து, 'எல்காட்' அதிகாரிகள் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று
சோதனை நடத்த உள்ளனர். ஐந்து ஆண்டுகளில், லேப்டாப் வழங்கியதற்கான ஆவணங்கள்;
மாணவர்களின் உண்மையான எண்ணிக்கை; மாணவர்கள் உண்மையான கையெழுத்திட்ட
பதிவேடு; கணக்கு காட்டிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய உள்ளனர்.
பள்ளிகளுக்கு வரும், எல்காட் அதிகாரிகளுக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க,
தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -