ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற, பார்வையற்ற ஜுடோ
வீரர் மனோகரன், காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்பதற்கு, 'ஸ்பான்சர்'
இல்லாமல் தவித்து வருகிறார்.
சென்னையை அடுத்துள்ள சோழவரம் பகுதியைச்
சேர்ந்தவர் மனோகரன், 27. பார்வையற்ற அவருக்கு, இயல்பிலேயே தற்காப்பு
கலைகளின் மீது ஆர்வம். இதுவரை நான்கு தேசிய மற்றும் மாநில அளவிலான
போட்டிகளில், தலா நான்கு பதக்கங்கள் வென்றுள்ளார்.மேலும், 2014ல்
தென்கொரியாவின் சியோல் நகரில் நடந்த, மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா
விளையாட்டுப் போட்டிகளில், ஜுடோ பிரிவில் வெண்கலம் வென்று, நாட்டுக்குப்
பெருமை சேர்த்தார்.
கவுரவிப்பு:
சமீபத்தில்,
உ.பி., மாநில தலைநகர் லக்னோவில் நடந்த, 'சீனியர் பிளைண்ட் சாம்பியன்ஷிப்'
தொடரில், தங்கம் வென்று சாதித்தார். இதன் மூலம், தென் ஆப்ரிக்காவில்
ஏப்ரல், 23ம் தேதி துவங்க உள்ள, மாற்றுத்திறனாளிகளுக்கான காமன்வெல்த்
போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.தமிழகத்தில் இருந்து மனோகர்
மற்றும் இரண்டு பெண்கள், காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா சார்பில்
பங்கேற்க உள்ளனர்.ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்,
வீராங்கனைகளுக்குதமிழக அரசு பரிசு வழங்கி கவுரவித்தது. ஆனால், ஆசிய பாரா
விளையாட்டுப் போட்டிகளில், வெண்கலம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த
மனோகருக்கு, அரசு சார்பில் எவ்வித பரிசும் வழங்கப்படவில்லை. சர்வதேச
அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கு, மத்திய அரசு உதவி வருகிறது என்றாலும்,
தேசிய அளவிலான போட்டிகளுக்கு தன் சொந்த செலவிலேயே, மனோகர் பங்கேற்று
வருகிறார்.
இதுகுறித்து, மனோகர் கூறியதாவது:சின்ன
வயதில் இருந்தே, எனக்கு தற்காப்பு கலைகளின் மீது ஆர்வம் அதிகம். முதலில்
கராத்தே கற்றேன். தற்காப்பு கலையில் எனக்கு இருக்கும் ஆர்வத்தைப் பார்த்த,
சித்த மருத்துவர் ஒருவர், ஜுடோவில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி,
பயிற்சியாளர் உமா சங்கரிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.அவரிடம் ஆறு
ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்ட பின், தேசிய, மாநில அளவில் மட்டுமல்லாது
சர்வதேச அளவிலும் ஜொலிக்க முடிந்தது. ஆசிய பாரா போட்டிகளில் வெண்கலம்
வென்றேன். ஆனால், அதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.
'ஸ்பான்சர்' தேவை:
பொதுவாக,
ஜுடோ விளையாட்டுக்கு, அதிலும் பார்வையற்றோருக்கான ஜுடோ போட்டிக்கு ஆதரவு
அதிகம் இருப்பதில்லை. ஆசிய பாரா போட்டிகளில் பதக்கம் வென்றதன் மூலம்,
இப்போது கொஞ்சம் இந்த போட்டியைப் பற்றி பலருக்கும் தெரிய வந்துள்ளது.ஆசிய
விளையாட்டுப் போட்டிகள் நடந்த அதே தென் கொரியாவில், அதே நேரத்தில் தான்,
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளும் நடந்தன. ஆசிய போட்டிகளில் வென்ற தமிழக
வீரர்களுக்கு, அரசு பரிசு வழங்கி விட்டது.ஆனால், மாற்றுத்திறனாளிகளான
எங்களுக்கு இன்னும் எந்த பரிசும் கிடைக்கவில்லை. ஜுடோ மீதிருக்கும்
ஆர்வத்தால், சொந்த செலவிலேயே போட்டிகளில் பங்கேற்கிறேன்.அடுத்த மாதம் தென்
ஆப்ரிக்காவில் நடக்க உள்ள, காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு
பெற்றுள்ளேன். போதிய, 'ஸ்பான்சர்' கிடைத்தால், அங்கும் ஜொலிக்க
காத்திருக்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்புக்கு: 86820 47968