தமிழகம், புதுச்சேரியில் மே 16-இல் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதால்,
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே மே 9-இல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 4-இல் தொடங்கி
ஏப்ரல் 1-இல் முடிவடைந்தது.
தமிழகம், புதுச்சேரியில்
6,550 பள்ளிகளைச் சேர்ந்த 3 லட்சத்து 91 ஆயிரத்து 806 மாணவர்களும், 4
லட்சத்து 47 ஆயிரத்து 891 மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர்.இதுகுறித்து
கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச்
14-இல் தொடங்கிவிட்டது. தற்போது தமிழ், ஆங்கிலம் விடைத்தாள்களை திருத்தும்
பணி முழுமையாக முடிவடைந்துள்ளது.விடைத்தாள்களை திருத்தும் பணியை வருகிற
20-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்என கல்வித் துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.தமிழகம், புதுச்சேரியில் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்
பதிவு மே 16-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 19-ஆம் தேதியும் நடைபெற
உள்ளது. இதனால், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட
கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொறியியல்
படிப்புகளுக்கு இந்த முறை இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தேர்தல் வாக்குப்
பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மே 2-ஆவது வார
இறுதியிலோ அல்லது அதற்கு பிறகோ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவது
பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.எனவே, பிரச்னைகளைத் தவிர்க்க,
முன்கூட்டியே தேர்வு முடிவுகளை வெளியிட கல்வித் துறை அதிகாரிகள்
திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி மே9-ஆம் தேதி பிளஸ் 2
பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.