'சத்துணவு பணியாளர்களின் பணிநிரந்தரம், மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம்
உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற, தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தால்
அக்கட்சிக்கு ஆதரவுதருவோம்,'
என மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர். பழநியில் ஓய்வு பெற்ற சத்துணவுப் பணியாளர்களுக்கு பாராட்டுவிழா நடந்தது.
இதில் சத்துணவுப்பணியாளர்கள் ஒன்றியம் சங்கத்தின் மாநில தலைவர்
சின்னச்சாமி, பொதுசெயலாளர் குணசேகரன், எம்.ஜி.ஆர். சத்துணவுப்பணியாளர்
பேரவை மாநில தலைவர் புருஷோத்தமன், தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு
பணியாளர்கள் பேரவை மாநில பொதுச்செயலாளர் ராஜகுமாரன் ஆகியோர் கூறியதாவது:
தமிழக முழுவதும் இரண்டு லட்சம் சத்துணவு பணியாளர்கள் உள்ளனர். எங்களுடன்
10 அமைப்புகள் இணைந்து 17 மாவட்டங்களில் 15 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக
உள்ளனர். கடந்த பிப்ரவரியில் நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான
கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி 110விதியின் கீழ்
சத்துணவு பணியாளர்கள் ஓய்வு நிதி ரூ.50 ஆயிரத்தில் இருந்து
ரூ.60ஆயிரமாகவும், பணிக்காலத்தில் இறந்தால் உதவிதொகை ரூ.1.5 லட்சத்தில்
இருந்து ரூ.3 லட்சமாக ஆகவும், மாத ஓய்வூதியம் ரூ.ஆயிரத்தில் இருந்து
ரூ.1500 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
எங்களது முக்கிய கோரிக்கையான சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி
பணிநிரந்தரம், பதவிஉயர்வு, மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம், ஓய்வுநிதி
ரூ.3லட்சம் வழங்க வேண்டும்.
இவற்றை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டால்
அவர்களுக்கு ஆதரவு தருவது குறித்து மாவட்ட, மாநில நிர்வாகிகள் கூட்டம்
நடத்தி அதில் முடிவு செய்வோம்,” என்றனர்.