பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக,
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம், தமிழ்நாடு மேல்நிலைப்
பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை மனுவை புதன்கிழமை
அளித்தனர்.தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம்
சார்பில் அளித்த மனு: கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்தில் கிருஷ்ணகிரி,
ஒசூர் என இரு மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று
வருகிறது.
ஒசூர் மையத்தில்
திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் வசித்து வருகின்றனர். எனவே, அவர்களின்
விருப்பப்படி கிருஷ்ணகிரி மையத்திலேயே விடைத்தாள் திருத்தும் பணியை வழங்க
வேண்டும்.இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், தாவரவியல், விலங்கியல்,
வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கான முதுநிலை
ஆசிரியர்கள் நியமனத்தில்ஆங்கில வழி, தமிழ் வழி என தனித்தனியே
நியமிக்கப்படும் முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வு அலுவலர், உதவி தேர்வாளர்
ஆகியோர் நியமனத்தை ரத்து செய்து, பொதுவான ஆணை வழங்க வேண்டும்.மேலும்,
முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வு அலுவலர், உதவி தேர்வாளர் ஆகியோரது
நியமனத்தில், முதுநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்த நாளை கணக்கில் கொண்டு
பணிமூப்பின் அடிப்படையிலேயே அனைத்துப் பணிகளும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
முதுநிலை ஆசிரியர்களுக்கு மதிப்பெண் சரிபார்ப்பு அலுவலர் பணி வழங்க
வேண்டும்.
மேலும், விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்களுக்கு
குடிநீர், கழிவறை, மின்சாரம், மின்விசிறி, இருக்கை வசதிகளை முறையாக செய்து
தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மாவட்டத் தலைவர் லட்சுமணன்,
செயலர் கோபி, பொருளர் சத்தியமூர்த்தி, மாநில சட்டச் செயலர் சீனிவாசன்
உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் உடனிருந்தனர்.







