தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கட்டாயக்கல்வி சட்டம் அமலில் உள்ளதால், எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவ, மாணவியரையும் பாஸ் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில், தமிழ், கணக்கு பாடத்தின் அடிப்படை கூட தெரியாமல், பல மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பு வரை, வந்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அதே போல், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பிலும், பெரும்பாலும் ஆல்பாஸ்தான் போடப்பட்டு வந்தது.
மாணவர்களை பெயில் செய்தால், அதற்கான காரணத்தை உயர் அதிகாரிகளிடம் விளக்க வேண்டியிருந்ததால், வெகு அரிதாக மட்டுமே மாணவர்கள் பெயில் செய்யப்பட்டனர். ஆனால், அதற்கு பதில் அம்மாணவனின் பெற்றோரை அழைத்து, மாற்றுச்சான்றிதழ் கொடுத்து அனுப்பும் பணியை பல தலைமை ஆசிரியர்கள் செய்து வந்தனர். இதனால், இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஒன்பதாம் வகுப்பில் அதிகமாக இருந்தது.
அதே போல், பிளஸ் 1 வகுப்பில் ஆல் பாஸ் என்பதால், மாணவர்கள் பிளஸ் 1 பாடங்களை படிப்பதில்லை என்பதால், பிளஸ் 2 பாடங்கள் புரியாமல் போகும் நிலை இருந்தது. இதனால், பிளஸ் 1 மற்றும் ஒன்பதாம் வகுப்பில், சராசரிக்கும் குறைவாக படிக்கும் மாணவர்களை பெயில் செய்ய அனுமதிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், பிளஸ் 1 மற்றும் ஒன்பதாம் வகுப்பு தேர்ச்சிக்கு ஒப்பளிக்கும் கூட்டம், சேலம் சூரமங்கலம் செயின்ட் ஜோசப் பள்ளியில் நடந்தது. இதில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பில், ஒவ்வொரு பள்ளிக்கும், 5 சதவிகிதம் வரை மாணவர்களை பெயில் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.








