முதல் கட்ட பயிற்சி ஏப்.,24ல் நடந்தது. இதில் ஆசிரியர்கள் 14 ஆயிரம் பேர் பங்கேற்றனர். விலக்கு அளிக்கப்பட்டவர் தவிர சிலர் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இதன்படி தொடக்க கல்வியில் 375, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் 208 என மொத்தம் 583 ஆசிரியர்களுக்கு அனுப்பிய நோட்டீசில் நேற்று (மே 2) நேரில் ஆஜராகி கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது.
ஆனால், 583 பேரில் 95 சதவீத ஆசிரியர்கள் ஏப்.,24 பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்கள். அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் அதிர்ச்சியடைந்து, அதிகாரிகளை தொடர்பு கொண்டு விவரம் கேட்டனர். அதற்கு, பயிற்சி வகுப்பில் பங்கேற்றேன் என விளக்க கடிதம் எழுதிக் கொடுத்தால் போதும், என தெரிவித்தனர்.
தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் விவரம் குறித்து உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விவரம் கேட்டனர். அப்போது அளிக்கப்பட்ட ஆசிரியர் விண்ணப்ப விவரங்களை வி.ஏ.ஓ.,க்கள், தாசில்தார்கள் ஆய்வு செய்து தேர்தல் பிரிவில் சமர்ப்பித்தனர்.
ஆனால் அந்த விண்ணப்பங்கள் என்ன ஆனது என தெரியவில்லை. ஆனால், மீண்டும் ஆசிரியர்களிடம் தனிப்பட்ட விண்ணப்பம் பெற்று தேர்தல் பிரிவில் சமர்ப்பிக்கப்பட்டது.
இரு விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டு ஓர் ஆசிரியருக்கு தனித்தனியே இரண்டு உத்தரவுகளை தேர்தல் அதிகாரிகள் அனுப்பியதால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டது.
இத்தகவல் அறிந்து, ஆசிரியர்கள் கையில் ஓர் உத்தரவை மட்டும் அதிகாரிகள் வழங்கினர். இந்நிலையில் மற்றொரு உத்தரவுப்படி பங்கேற்ற ஆசிரியர்களும் பயிற்சிக்கு வரவில்லை என நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளனர், என்றார்.








