மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான புதிய விதிமுறைகளை, பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரப்போகும் இறுதி நாட்களில் சொல்வது, எவ்விதத்தில் நியாயமாகும்?'மருத்துவக் கல்லுாரிக்கான விண்ணப்பங்கள், மே 9ம் தேதி வினியோகிக்கப்படும்' என்று ஏற்கனவே தமிழக மருத்துவக் கல்லுாரி இயக்ககம் அறிவித்து உள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.
கொஞ்ச நாட்கள் அந்த ஆக்ரோஷம் ஓடும். மக்கள் கட்சிகளின் பற்றை கொஞ்சம் நம்பத் தொடங்கி விட்டனர் என்றால், உடனே அரசியல்வாதிகள் அதை மறந்துவிட்டு, அடுத்த விஷயத்திற்குப் போய்விடுவர்.இந்தப் பட்டியலில், நுழைவுத் தேர்வும் சேர்ந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. அதிக அச்சத்திற்குக் காரணம் பாதிக்கப்பட போவது குழந்தைகள் என்பதும், அவர்களின் எதிர்காலம் இதில் அடங்கி இருக்கிறது என்பதும் தான்.மாணவர்களை வழிநடத்துவது கல்வி நிறுவனங்கள் தான். கல்வி நிறுவனங்களை வழிநடத்தும் அரசு, தனக்கென கல்விக் கொள்கைகளை வகுக்கிறது. கல்விக் கொள்கைகளை வரையறுக்க கல்வியாளர்களை, அரசியல்வாதிகளை, அதிகாரிகளை நம்பியிருக்கிறது...மாநில முடிவுகள், மாநிலத்தின் சுயாட்சி, மாநிலத்தின் தனித்த கல்விக் கொள்கைகள் என்று எத்தனையோ விஷயங்களை உள்ளடக்கி, மாநில அரசு கல்வி சார்ந்த முடிவுகளை எடுக்கிறது.
எந்த முடிவு எடுத்தாலும், என்ன கல்விக் கொள்கை கொண்டு வந்தாலும், அதில் மாணவர்கள் பாதிக்கா வண்ணம் இருக்க வேண்டும். அவர்களின் கல்வித் தரம் மேம்பட வேண்டும். அவர்கள் எந்த இடையூறும் இல்லாமல் உயர்கல்வி பெற வேண்டும். இதுதான் மாணவர்களின் சின்ன எதிர்பார்ப்பு. நுழைவுத் தேர்வு ரத்து என்பது தமிழக மாணவர்களுக்கு அரிய வரப்பிரசாதம். நுழைவுத் தேர்வு வேண்டும் என்று விரும்புபவர்கள், இரண்டு மிக முக்கியமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
ஒரு பள்ளி, அரசின் கண்களைக் கட்டிவிட்டு தன்னிச்சையாக நடக்கும் என்பது அரசாங்கத்தின் பலவீனம் தானே!கல்வியில் ஏன் இத்தனை குழப்பமான நடைமுறைகள்? ஏற்றத் தாழ்வுகள்? விதவிதமான பாடங்கள்? பாடத்திட்டங்கள்? இந்த ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யவே முடியாதா? சரி செய்ய முடியவில்லையென்றால், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் இப்படித்தான் அல்லாடிக் கொண்டு இருப்பரா? தனியார் பள்ளிகளின் முதலாளிகளாக அரசியல்வாதிகளே பெரும்பாலும் இருப்பதால், கல்வியில் சீர்திருத்தம் என்பது எட்டாக்கனியாக மாறிவரும் சூழ்நிலையில், மீண்டும் மீண்டும் கல்வியாளர்கள் வலியுறுத்த விரும்புவது, அரசாங்கம் நிச்சயம் கடினமான ஒரு முடிவை எடுத்தே தீர வேண்டும் என்பது தான்.அந்தக் கடினமான முடிவு கல்வியை முழுக்க முழுக்க அரசு மயமாக்குவதே. தங்களுடைய குடிகளுக்கு முழுமையான தரமான ஏற்றத்தாழ்வுகளற்ற ஒரு கல்வியைத் தர முன்வருவது மட்டுமே, மாணவர்களின் உயர் கல்விப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வாகும்.
கல்வி, அரசு மயமாக்கப்பட்டால், ஒவ்வொரு ஆண்டும் உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட எல்லா பிரச்னைகளுக்கும், நம்மால் தீர்வு கண்டறிய முடியும். அரசு மயம் என்ன சர்வரோக நிவாரணியா என கேட்கலாம். அரசு மயம் எனபது சர்வரோக நிவாரணியல்ல; ஆனால், அரசாங்கத்தை அது சரியாக செயல்படாதபட்சத்தில் நம்மால் கேள்வி கேட்க முடியும், நல்லகொள்கைகளுக்காக வலியுறுத்த முடியும், வழிக்கு வரவில்லையென்றால், அடுத்த தேர்தலில் அதற்கு பதில் சொல்ல முடியும்! பெரிய இரும்புக் கதவுகள் போட்ட பள்ளிகளின் உள்ளே கல்வியை அடகு வைத்துவிட்டு, அதன் சாவியையும் உள்ளே போட்டுவிட்டால், நம்மால் என்ன சீர்திருத்தத்தைச் செய்ய முடியும்?
அ.வெண்ணிலா
கட்டுரையாளர், கவிஞர்








