பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப்- 4 தேர்வுக்கான இலவச பயிற்சி
வகுப்புகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) தொடங்குகிறது என்றார் மாவட்ட ஆட்சியர்
க. நந்தகுமார்.இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் வெளியிடப்படும் பல்வேறு போட்டித்
தேர்வுகளுக்கு, மாவட்டவேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தின்
மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி
வகுப்புகள் மூலம் பயின்ற பலர் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுத்
துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையத்தின் 2015- 2016 ஆம் ஆண்டு திட்ட அறிக்கையில் 2016 ஜூலை 3- வது
வாரத்தில் தொகுதி 4-ல் அடங்கியுள்ள இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 4,931
காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, மேற்கண்ட தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில்
உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்று வெற்றி பெறும் நோக்கத்தில் குரூப்- 4
தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புவெள்ளிக்கிழமை முதல் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலக பயிற்சி அரங்கில் தொடங்குகிறது.
இந்த பயிற்சி அரங்கமானது 120
நபர்கள் அமரக்கூடிய இருக்கை, ஒலி, ஒளி அமைப்பு, பட வீழ்த்தி மற்றும்
மடிக்கணிணி உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. தற்கால போட்டித்
தேர்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களுடன் கூடிய நூலக வசதியும்
மேற்கொள்ளப்படுள்ளது.இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் கடவுச்சீட்டு
அளவு புகைப்படம், சுய விவர குறிப்பு மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றுடன்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்புகொண்டு பயன்பெறலாம்.