தயக்கமா? மயக்கமா? வெற்றி நிச்சயம் என்ற நூலில் திரு.சுகிசிவம் அவர்கள்
சிலர் எல்லோருடனும் கலகலப்பாகப் பழகுவார்கள். சிலர் தேர்ந்தெடுத்த சிலருடன் மட்டும் பழகுவார்கள். அறிமுகப்படுத்தாமல் பிறருடன் எப்படிப் பேசுவது என்று சிலர் வெகுவாகத் தயங்குவார்கள். அதிகமாக எல்லை மீறிப் பழகி அவமானத்தை அள்ளிக் கொண்டு வருபவர்களும் உண்டு. தன் வயதுக்கொத்த சமவயதுக்காரர்களிடம் மட்டுமே சிலர் பழகுவார்கள். தம்மைவிட வயதானவர்களுடன் பழக நேர்ந்தால் சிலர் கிண்டலடிப்பார்கள். அல்லது உம்மென்று இருந்து கழுத்தை அறுப்பார்கள். சிலரது இயல்பு தம்மைவிடச் சின்னப் பையன்களிடம் மட்டுமே பழகுவார்கள்...
இவர்களில் யார் செய்வது சரி? யார் செய்வது தவறு? சிலர் எல்லோருடனும் கலகலப்பாகப் பழகுவார்கள். சிலர் தேர்ந்தெடுத்த சிலருடன் மட்டும் பழகுவார்கள். அறிமுகப்படுத்தாமல் பிறருடன் எப்படிப் பேசுவது என்று சிலர் வெகுவாகத் தயங்குவார்கள். அதிகமாக எல்லை மீறிப் பழகி அவமானத்தை அள்ளிக் கொண்டு வருபவர்களும் உண்டு. தன் வயதுக்கொத்த சமவயதுக்காரர்களிடம் மட்டுமே சிலர் பழகுவார்கள். தம்மைவிட வயதானவர்களுடன் பழக நேர்ந்தால் சிலர் கிண்டலடிப்பார்கள். அல்லது உம்மென்று இருந்து கழுத்தை அறுப்பார்கள். சிலரது இயல்பு தம்மைவிடச் சின்னப் பையன்களிடம் மட்டுமே பழகுவார்கள்...
முதல் விஷயம்... பழகுங்கள். தயக்கம் இன்றிப் பிறருடன் இன்முகத்துடன் பேசிப் பழகுங்கள். விமானத்தில், ரயிலில், பேருந்தில் பக்கம் பக்கமாகப் பயணம் செய்யும்போது மணிக்கணக்காக ஊமைகள் போலவே பயணிப்பவர்கள் சிலர் உண்டு. மேலை நாட்டவர்கள் விமானப் பயணங்களில் அருகில் உட்காரும்போதே ஹலோ... அல்லது ஹாய்... அல்லது குட்மார்னிங் சொல்லி இன்முகத்துடன் புன்னகை புரிவார்கள். "மேற்கொண்டு பேசுவது உன் விரும்பம்' என்று பந்தை நம் பக்கத்தில் தள்ளிவிடுவார்கள்.
ஒரு முறை சிங்கப்பூர் பயணத்தின் போது எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மகன் என் அடுத்த இருக்கையில் இருந்தார். பளிச்சென்று அறிமுகப்படுத்திக் கொண்டு இயல்பாக, அறிவுபூர்வமாகப் பேசிக் கொண்டு வந்தார். தயக்கம் இன்றிப் பழகும் அவர் ஒரு வெற்றியாளர் என்று தீர்மானித்தேன்.
தேவையற்ற தயக்கம், கேட்பதா... வேண்டாமா என்ற குழப்பம், இவை முன்னேற்றத்தின் எதிரிகள். மற்றவரும் மனிதர்தான்... அளவாக, அறிவாகப் பேசினால் யாரும் வெறுக்கமாட்டார்கள். மனதிற்குள் இரண்டு மூன்று முறை பேசிப் பார்த்துக் கொண்டு பேசுங்கள்... தவறில்லை.
இராமனால் தூது அனுப்பப்பட்ட அனுமன் சீதையிடம் பேசும்முன் எப்படிப் பேசுவது என்று ஒத்திகை பார்த்துக் கொண்டதாக வால்மீகி எழுதுகிறார். எதிர்த் தரப்பில் இருப்பவர் பயந்துவிடக் கூடாது. வெறுப்படைந்துவிடலாகாது. சந்தேகப்பட்டுவிட்டால் சகலமும் கெட்டுவிடும். எனவே சொல்லின் செல்வனாகிய அனுமனே ஒத்திகை பார்க்கிறான் என்றால் நாம் ஒத்திகை பார்த்துக் கொண்டு பேசலாமே!
தீர்க்கமாக, தீர்மானமாக, தெளிவாகப் பேசுகிறவர்கள், பழகுகிறவர்கள் அபரிமிதமான வெற்றி அடைவது நிச்சயம். எனவே வேண்டாத தயக்கத்தை விட்டொழியுங்கள். ஒரு முறை சுவாமி ராமதீர்த்தர் லண்டன் பயணம் செய்கிறார். கப்பல் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்தார். ஐரோப்பியர் ஒருவரும் அதே நேரத்தில் மேல் தளத்திற்கு வந்தார். சுவாமி ராமதீர்த்தர் புன்னகை புரிந்து வரவேற்றுத் தம்மை அறிமுகம் செய்து கொண்டார். பேச்சு வளர்ந்தது.
லண்டனில் சுவாமி ராமதீர்த்தர் எங்கே தங்கப் போகிறார் என்று அறிய ஐரோப்பியர் விரும்பினார். ""நண்பர் வீட்டில்'' என்றார் ராமதீர்த்தர். ""அந்த நண்பரின் முகவரி தெரியுமா?'' என்றார் ஐரோப்பியர். ""தெரியாது'' என்றார் ராமதீர்த்தர். ""அந்த ஏரியா - இடமாவது தெரியுமா?'' என்றார் ஐரோப்பியர். ""தெரியாது'' என்றார் சுவாமி. ""லண்டனில் நீங்கள் தங்கப்போகும் நண்பரின் வீட்டு முகவரி இன்றி நண்பரை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? அது சுலபமல்லவே'' என்றார் ஐரோப்பியர். ""அவரைக் கண்டுபிடிப்பது கடினமே அல்ல... ஏன் என்றால் ஏற்கெனவே அவரை நான் கண்டுபிடித்துவிட்டேன்... இதோ என் எதிரில் நிற்கும் நீங்கள்தான் அந்த நண்பர்'' என்றார்.
ஐரோப்பியர் திகைத்து, ""நானா... நான் எப்படி உங்கள் நண்பராக முடியும்?'' என்று இழுத்தார். சுவாமி ராம்தீர்த்தரோ, ""நண்பரே... நீங்களும் மனிதன். நானும் மனிதன். நாம் நண்பராவதற்கு இதைவிட என்ன தகுதிகள் வேண்டும்'' என்றார். ஐரோப்பியர் கைகுலுக்கித் தழுவிக் கொண்டு தன் வீட்டில் தங்க அழைத்தார். சுவாமியும் தங்கினார். தயக்கம் இன்றிக் கூச்சம் இன்றிப் பழகுவது வெற்றிக்கான வித்து.
இன்னொரு முக்கிய விஷயம். நம்மைவிட வயதில் சிறியவர்களுடன் பழிகினால் மனசு இளமையாக, உற்சாகமாக இருக்கும். அதுவும் அவசியம். ஷீரடி சாயிபாபா சின்னப் பையன்களுடன் கோலி ஆடுவார் தெரியுமா? மனம் சந்தோஷமாக இருக்க இதுவே சரியான வழி. நம்மைவிடப் பெரியவர்களுடன் பழகினால் அறிவு வேகமாக விருத்தியாகும் தெரியுமா? பல புத்தகங்கள் படித்த அனுபவம், வெற்றி ரகசியம் முதியவர்களுடன் பழகினால் கிடைக்கும்... தெரியுமா? எழுத்தாளர் அகிலன், மூத்த திரு. கி.வா.ஜ.வுடன் பழகினார். அமரர் மீ.ப. சோமு அமரர் ராஜாஜியுடன் பழகினார். முன்னேற விரும்புகிறவர்கள் மூத்தவருடன் பழக வேண்டும். நான் என்னைவிட முதுமையான டாக்டர் ஒüவை நடராஜனுடனும், அமரர் கி.வா.ஜ. அவர்களுடனும், அமரர் குன்றக்குடி அடிகளாருடனும் தயங்காது பழகினேன். இவை என் வெற்றியின் ரகசியம்.
நம்மைவிடச் சிறியவர்களுடன் பழகினால் மனது இளமையாகும். பெரியவர்களுடன் பழகினால் அறிவு விருத்தியாகும். சமமானவர்களுடன் பழகினால் மகிழ்ச்சி அதிகமாகும்.
பழகுங்கள்... பழகுங்கள்... பழகுங்கள்... தயக்கம் இன்றிப் பழகுங்கள்.
#வெற்றி நிச்சயம் என்ற நூலில் திரு.சுகிசிவம் அவர்கள்