அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி., கல்லுாரிகளின், அரசு
ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலையில் ஒற்றை
சாளர முறையில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இந்த கவுன்சிலிங்கில் மாணவர்கள், தங்களுக்கான பாடப்பிரிவு
மற்றும் கல்லுாரிகளை தேர்வு செய்ய வசதியாக, கல்லுாரிகளின் செயல்திறன்
தேர்ச்சி பட்டியலை வெளியிட, இரு ஆண்டுகளுக்கு முன், சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டது.
இதன்படி, இந்த ஆண்டும் இன்ஜி., கல்லூரிகளின் செயல்திறன்
மற்றும் தேர்ச்சி சதவீத தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிக
தேர்ச்சி பெற்ற கல்லுாரிகள், குறைந்த தேர்ச்சி பெற்ற கல்லூரிகளுக்கு எதிராக
பிரசாரம் செய்வதாகவும், தேர்ச்சி சதவீதத்தை, தங்களது நிர்வாக ஒதுக்கீட்டு
இடங்களை நிரப்புவதற்கு, வணிக ரீதியாக பயன்படுத்துவதாகவும், அண்ணா
பல்கலைக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து, அண்ணா பல்கலையின் தேர்வுத்துறை
கட்டுப்பாட்டு அதிகாரி உமா, தனியார் இன்ஜி.,
கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,
மாணவர் தேர்ச்சியை அடிப்படையாக கொண்டு, கல்லுாரிகளின் தரவரிசை பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், சில கல்லுாரிகள், இந்த பட்டியலை வணிக
நோக்குக்காக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அவ்வாறு ஈடுபடுவது,
விதிகளுக்கு முரணானது. எந்த கல்லூரியாவது இப்படி செயல்படுவது தெரியவந்தால்,
நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்துள்ளார்.