அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின்
விதிகளை மீறியதால், இரண்டு இன்ஜினியரிங் கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து
செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், 530 இன்ஜி., கல்லுாரிகள் பி.இ., -
பி.டெக்., படிப்பையும், 40க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் பி.ஆர்க்.,
படிப்பையும் நடத்துகின்றன.
இந்த கல்லுாரிகள் அனைத்தும், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம்
பெற்று, அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்து பெற்று, மாணவர்களை
சேர்க்கின்றன.இந்த ஆண்டு, இன்ஜி., கல்லுாரிகளுக்கான அங்கீகாரம் மற்றும்
இணைப்பு அந்தஸ்து நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. 2015ல், இணைப்பு
பெற்ற, 500க்கும் மேற்பட்ட கல்லுாரிகளுக்கு, இந்த ஆண்டும் அங்கீகாரம்
அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், விதிகளை பூர்த்தி செய்யாத, இரண்டு இன்ஜி.,
கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை.சென்னை அருகில் மாங்காட்டில் உள்ள
முத்துக்குமரன் இன்ஜி., கல்லுாரியும், திருச்சியில் எம்.பி.ஏ., மட்டும்
நடத்தும் கல்லுாரியும் அங்கீகாரத்தை இழந்துள்ளன. இதற்கிடையில், இரண்டு
புதிய கல்லுாரிகள் அங்கீகாரம் கேட்டுள்ளன. ஈரோடு, ஸ்பெக்ட்ரம் இன்ஜி.,
கல்லுாரி மற்றும் கன்னியாகுமரி நீரஜ் இன்ஜி., கல்லுாரி ஆகியவை, புதிதாக
அங்கீகாரம் கேட்டு, அண்ணா பல்கலைக்கு விண்ணப்பித்துள்ளன; அவை பரிசீலினையில்
உள்ளன.
அதேபோல், தமிழகத்தில் முதல் முறையாக, ஒருங்கிணைந்த ஐந்து
ஆண்டு எம்.பி.ஏ., படிப்புக்கு, அண்ணா பல்கலை இணைப்பு அந்தஸ்து
வழங்கியுள்ளது. கோவை எக்செல் கல்வி நிறுவன கல்லுாரிக்கு, இந்த படிப்பு
துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இவை தவிர, 40க்கும் மேற்பட்ட பி.ஆர்க்.,
படிப்புக்கான கல்லுாரிகளின் விண்ணப்பங்களும், அண்ணா பல்கலை யின்
பரிசீலினையில் உள்ளன. எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு, அண்ணா
பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில் பல, தங்களது மாணவர் எண்ணிக்கை அளவை
குறைத்துள்ளன. அதன் மூலம், பேராசிரியர்களுக்கான பற்றாக்குறை நீங்கும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.